ஊரடங்குச் சட்ட நேரத்தில் கடைகளை உடைத்து திருடிய செக்யூரிட்டி ஊழியர் (முன்னாள் கடற்படை அதிகாரி ) பொலிசாரால் கைது.
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுநாயக்க பகுதியில் கடைகளை உடைத்து அங்கு
விற்பனைக்கு வைத்திருந்த 2 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்jதார் என்ற சந்தேகத்தில் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க தெரிவித்தார்.கட்டுநாயக்க பொலிஸார் நேற்று (15) மாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – மத்துரட்ட பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 22 வருடங்கள் கடற்படையில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் ஓய்வுபெற்ற பின்னர் கட்டுநாயக்கவிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் தனியார் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றியதுடன் இரவு நேரங்களில் கடைகளில் புகுந்து திருடி வந்துள்ளார் எனவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் வங்கி ஒன்றில் 25 இலட்சம் ரூபா கடனாகப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து கோவிண்ண பகுதியிலுள்ள சுற்றலா விடுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பலாங்கொடை, கோவிண்ண, மற்றும் மாதுவ பகுதிகளிலுள்ள கடைகளிலேயே கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.