20வது திருத்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
20வது திருத்த சட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் எதிராக
 வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான M.A சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் 20வது திருத்தம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நடைபெற்றது.


இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பிரதம கருத்துரையாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர்:-


ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது ஒரு சட்டம் அல்ல. அதில் ஒரு சட்ட விடயங்கள் இருக்கலாம். ஆனால் அது ஒரு ஒப்பந்தம். ஒரு நாட்டின் மக்களிடையே இருக்கின்றவர்கள் தங்களிடையே ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு ஒப்பந்தம். இதனை சமூக உடன்படிக்கையென்றும் சொல்வார்கள்.

முடியாட்சி முடிந்து மக்கள் ஆட்சி ஆரம்பிக்கும் காலத்தில்தான் இவ்வாறு அரசியலமைப்பு மூலமாக எவ்வாறு இந்த நாட்டின் ஆட்சி இருக்கப்போகின்றது என்பதை வரையறுத்து கூறுகின்றது.வெவ்வாறான ஆட்சி முறைகள் இருந்தாலும் குடியாட்சி முறைகளுக்கு அடித்தளமான விடயங்கள் ஒன்றாக காணப்படுகின்றன.

UNPயை தவிர மற்றைய அனைத்து கட்சிகளும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை எதிர்த்தனர். அதனை நாங்கள் இல்லாமல் செய்வோம் என்று சொல்லியிருந்தார்கள்.

1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா போட்டியிருந்தபோது இந் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி வழங்கி ஜனாதிபதியானார்.

1996ம் ஆண்டு நிறைவேற்று அதிகார முறைமையை கொண்டுவந்த UNP அதனை ஒழிக்கவேண்டும் என்ற தீர்மானத்தினை நிறைவேற்றியது. இன்று வரைக்கும் அவர்களின் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக அது உள்ளது.



அதன் பின்னர் அனைத்து கட்சிகளும் நிறைவேற்று அதிகாரமுறை ஒழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடன்தான் இருந்தன. ஆனால் இன்று வரைக்கும் அது நடக்கவில்லை.

மாறி மாறி வந்த ஜனாதிபதிகள் இதனை வைத்தே வாக்கு கேட்டார்கள். ஆனால் செய்யவில்லை. ஆனால் 2000ம் ஆண்டு ஒரு புதிய அரசியலமைப்பை பாரளுமன்றத்திற்கு கொண்டுவந்தார்கள்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வும் அதில் இருந்தது. 13வது திருத்த சட்டம் கொண்டு வந்தபோது தமிழ் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

1987ம் ஆண்டு J.R ஜயவர்த்தன டெல்லிக்கு அழைக்கப்பட்டு அதில் மாற்றங்களை செய்யவேண்டும் என கோரப்பட்டது. இது மிகவும் முக்கியமானது.

இன்றிருக்கின்ற மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு கொடுப்பதாக இருந்தால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களுக்குத்தான் கொடுக்கப்படவேண்டும். அந்த அரச அதிகாரங்கள் மக்களின் கைகளிலேயே வழங்கப்படவேண்டும்.

ஆனால் தற்போது 13வது திருத்தத்தில் இருக்கின்ற முறைமை எப்படியென்றால் நீதித்துறை பகிரப்படவில்லை, மத்தியில்தான் இருக்கின்றது. சட்டவாக்கல் அதிகாரம் மாகாணசபைக்கு இருந்தாலும் ஒரு சட்டத்தினை இயற்றுக்கின்றபோது ஆளுனர் அனுமதியளிக்கவேண்டும்.

இறுதி அதிகாரம் ஆளுனரிடமே இருக்கின்றது. அதேபோன்று மத்தியில் இருக்கின்ற அதிகாரங்கள் அனைத்தும் தனியொருவரிடம் கொடுத்துவிட்டு இருக்கின்ற நிலையுள்ளது.

சென்ற வருடம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் நிறைவாக இல்லாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்து. நிறைவேற்று அதிகாரம் இல்லாமல் ஆக்கப்படுவது இருந்தது.

2001ம் ஆண்டு 17வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டபோது நிறைவேற்று அதிகாரமுறையில் இருக்கின்ற சில குறைபாடுகளை ஓரளவுக்காகவது நிவர்த்தி செய்யவேண்டும் என்பதற்காக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன.

அத்துடன் ஒரு அரசியலமைப்பு சபையும் உருவாக்கப்பட்டு ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அரசியலமைப்பு சபையின் அனுமதியுடன் நியமிக்க வேண்டும் என்ற ஏற்பாடும் இருந்தது.

நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் அவற்றினை செய்யவில்லை. அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாமலே மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அது நிறைவுக்கு வந்தது.


2010ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் J.R ஜயவர்த்தனவுக்கு இருந்த அதிகாரம் எனக்கும் வேண்டும் என்றுதான் 18வது அரசியலமைப்பு திருத்ததினை கொண்டுவந்தார்.

இந்த திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தையும் இல்லாமல் செய்தது. 18வது அரசியலமைப்பு திருத்தம் பாரளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை கடுமையாக எதிர்த்தது. UNPயிலிருந்து பலர் களட்டப்பட்டனர்.

மீதமுள்ளவர்களை காப்பாற்ற UNP பாரளுமன்றத்தினை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டு எங்களில் யாரும் மாறவில்லையென்பதை ஆணித்தரமாக கூறிவிட்டு அமர்ந்தபோது அரியம் MPக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பியசேன எழுந்து மறுபுறம் சென்றார்.

அதற்கு எதிராக நாங்கள் முழுமையாக செயற்பட்டோம். அதிகாரங்கள் பகிரப்படுவது என்பது மாகாணங்களுக்கு பகிரப்படுதல் மட்டுமல்ல அதில் ஒரு சமநிலை பேணப்படவேண்டும்.

ஒருவரின் கைகளில் அதிக அதிகாரங்கள் இருக்ககூடாது. 2010ம் ஆண்டு 18வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதம நீதியரசரை பதவி நீக்க தனது அதிகாரத்தினை மகிந்த ராஜபக்ஸ காண்பித்தார். தனது அதிகாரங்களை பிரயோகித்து காண்பிப்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

இதன் காரணமாக இந்நிலைமை மாற்றப்படவேண்டும் என்ற கருத்து பெரும்பான்மை மக்களிடமிருந்து எழுந்தது. அதன் காரணமாக 2012ம் ஆண்டு சோபித தேரர் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினை நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிப்பது என்ற கோசத்துடன் ஆரம்பித்தார்.

அதன் பிறகு வேறு பல விடயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டு தமிழ் மக்களுக்கான தீர்வு அதிகாரப்பகிர்வு மூலம் செய்யப்பட வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுத்தான் 2014ம் ஆண்டு மாற்று அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபட்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரப்பட்டு மகிந்த ராஜபக்ஸ தோற்கடிக்கப்பட்டார்.

மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிப்பேன் என்ற வாக்குறுதியை வழங்கினார். அதனடிப்படையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் அரசியலமைப்பு சீர்திருத்தம் 2 பகுதிகளாக செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சர்வஜன வாக்கெடுப்புக்கு தேவையான பகுதிகள் பாரளுமன்ற தேர்தலுக்கு பின்னர் செய்யப்படும், சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லாமல் ஜனாதிபதியின் அதிகார குறைப்பு விடயங்கள் அரசியலமைப்பு திருத்தம் மூலம் முன்னதாக செய்யப்படும் என்று கூறப்பட்டது.

அதன் காரணமாகவே 19வது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இவற்றில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படவில்லை.

தமிழ் தேசிய அதிகாரப்பகிர்வு பேசப்படவில்லை, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் பல சரத்துகள் காணப்பட்டதுடன், பாரளுமன்றத்திற்கு அதிகாரம் கூட்டப்பட்டது.

மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்களில் ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டது. அதற்கு அனைவரும் ஆதரவும் வழங்கினர்.

அந்த விடயங்கள் வடகிழக்கினை தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் கேட்டுக்கொண்ட விடயங்கள். அவர்கள் 7 பேரும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முதலமைச்சர்கள்,UNPயினர் அல்ல.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர்களும் , இந்த அதிகார பகிர்வு முறைக்கு இணங்கினார்கள். அதனடிப்படையிலேயே 2வது இடைக்கால அறிக்கையுடன் வரைவு ஒன்றும் முன்வைக்கப்பட்டது.

ஆனால் நிறைவேற்று அதிகாரமுறையினை ஒழித்தல், பாரளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றல் என்பவற்றில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.

ஆரம்பத்தில் அவற்றினை செய்வேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி கொடுத்திருந்தாலும் நிறைவேறும் தறுவாயில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதில் பின்னடைய தொடங்கியது.

அதில் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் அதனை எதிர்க்க தொடங்கினார்கள். நாட்டில் ஒரு வித்தியாசமான சூழ்நிலையினை உருவாக்கினார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடைபெற்ற உடனேயே நாட்டில் பலமான ஜனாதிபதி தேவையென்கின்ற எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்தது. அதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் 25 வருடகால சரித்திரத்தினையும் தாண்டி வெற்றிபெற்றார்.

தற்போது மூன்றில் பெரும்பான்மை கிடைத்ததன் காரணமாக , ஆணை தங்களுக்கே கிடைத்ததாக கூறியே 20வது திருத்தத்தினை கொண்டு வந்துள்ளார்கள்.

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையென்பதை சொல்கின்றார்கள். 20வது திருத்தினை கொண்டுவந்து 19வது திருத்தத்தினை நீக்குவேன் என்று கூறும் ஜனாதிபதி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவேன் என்றும் கூறுகின்றார்.

புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுமானால் இந்த 20வது அரசியலமைப்பினை அவசரமாக கொண்டு வருவதன் தேவையென்ன என்ற கேள்வியெழுகின்றது. 20வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சே இருக்காது.

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென்பதை மும்முரமாக சொல்கின்றவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கின்ற ஒரே காரணத்தினால் எங்களது தீர்மானங்கள் அரசாட்சியில் தாக்கம் செலுத்தாமல் இருப்பதை மாற்றியமைக்க வேண்டும்,

அதனால்தான் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிரப்படவேண்டும் என்று கோருவது நாங்கள் மட்டும்தான். அதிகாரப்பகிர்வு தமிழ் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான அடிப்படைக் காரணியாகும்.

மத்தியில் இருக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். பாரளுமன்றத்தின்அதிகாரங்கள் கூட்டப்படவேண்டும். பாரளுமன்றத்திலிருந்து அதிகாரங்களை ஜனாதிபதி மீண்டும் எடுத்துக் கொள்வது என்பது நாங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாத விடயம்.

19வது திருத்தம் சட்ட மூலம் பாரளுமன்றத்திற்கு வழங்கிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு மீண்டும் கொடுப்பதே 20வது திருத்தத்தின் நோக்கமாகும். இது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத செயல்.

20வது திருத்ததிற்கு எதிராக நீதிமன்றம் சென்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம். ஜனாதிபதியின் செயல் நீதிமன்றத்தினை சவாலுக்குட்படுத்த முடியும் அந்த காப்பரண் அவருக்கு திரும்ப வழங்கமுடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெறப்படவேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும்.

விசேடமாக கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தொல்லியல் செயலணி என்பது முழுக்கமுழுக்க சட்ட விரோதமானது. அந்த நியமனங்கள் சட்ட விரோதமானது. தொல்லியல் திணைக்களம் நாட்டில் உள்ளது, அது தொடர்பான சட்டம் நாட்டில் உள்ளது. பணிப்பாளர் நாயகம் ஒருவர் இருக்கின்றார்.

சட்டத்தினால் அவருக்குத்தான் அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஜனாதிபதி தன்னிச்சையாக ஒரு செயலணிக்கு வழங்க முடியாது. இது முற்று முழுதான சட்டவிரோதமான செயல். அது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் காணிகளை கையாள்வதற்கு ஆளுனருக்கு எந்தவிதமான அதிகாரங்களும் கிடையாது. ஜனாதிபதி இன்று சொல்வது போலவே அவரின் அடிவருடிகளும் அதனை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

நான் வாயால் ஒன்றை சொன்னால் அதுதான் சுற்றுநிரூபம் என்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அதற்கு சட்டத்தினால் அதிகாரம் வழங்கப்படவில்லை.

ஆனால் தங்களிடம் தான் அதிகாரம் உள்ளது என்ற தோரணையில் இயங்குகின்றார்கள், இயக்குகின்றார்கள். அவர்கள் சொல்வதுதான் சட்டமாகவும் நடைபெறுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட GA உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். தனது கடமையினை சரியாக செய்ததன் காரணமாக அவர் பழிவாங்கப்பட்டிருக்கின்றார். அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவெல்லாம் பேசப்படும்போது நேரடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த அரசாங்கத்தினால் ஒரு அரச அதிகாரி அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். இதற்கான கண்டனத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் கடுமையாக இதனை கண்டிக்கின்றோம்.

இல்லாத அதிகாரங்களையெல்லாம் தங்களுடையது என்று நினைத்து செயற்படுகின்றவர்களுக்கு அதிகாரத்தினை சட்டத்தினாலேயே வழங்கினால் எதுவுமே செய்யமுடியாத நிலையே ஏற்படும்.

ஜனாதிபதி செய்வதை கட்டுப்படுத்துகின்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமல் போய்விட்டது. நீதிமன்றம் அதனை தடுக்கவில்லை.

நாட்டிலே ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதன் மூலமாகத்தான் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற மக்களின் சிலசில உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

நாட்டில் ஜனநாயகம் சீரழிந்து போகும்போது முதலாவதாக பாதிக்கப்படுவது சிறுபான்மை சமூகமாகும். சிங்கள மக்களின் ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்கு சுமந்திரன் நீதிமன்றம் செல்வதாக சிலர் எழுதுகின்றனர்.

நாட்டில் ஜனநாயகம் சீரழிந்து போகும்போது முதலாவதாக பாதிக்கப்படுவது சிறுபான்மை சமூகமாகும். அடிப்படையையாவது முதலில் நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிகாரப்பகிர்வு என்கின்ற கோட்பாடை நாங்கள் முழுமையாக ஆதரிக்கின்றோம். அது மத்திக்கும் மாகாணத்திற்குமான அதிகாரப்பகிர்வு மட்டுமல்ல.

20வது திருத்தச் சட்டமூலம் எதிர்க்கப்படவேண்டும், நிறைவேற்றாமல் தடுக்கப்பட வேண்டும் என்பது நாங்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய விடயம்.

இன்று இந்த ஜனாதிபதியை கொண்டு வந்த பல சக்திகளும் திடீர் ஞானம் கிடைத்தது போன்று செயற்படுகின்றார்கள். 20வது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுகின்றனர் எனத் தெரிவித்தார்.
20வது திருத்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு! 20வது திருத்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு! Reviewed by Madawala News on October 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.