ஏ.ஆர்.ஏ. பரீல்
இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி
இதுவரை 16 பேர் மரணித்துள்ள நிலையில், இறுதியாக மரணித்த நபரின் ஜனாஸா இன்றைய தினம் பொரளை, மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 02, கொம்பனித்தெருவை வசிப்பிடமாகக் கொண்ட 70 வயதான நபர் ஒருவரே நேற்றைய தினம் (25) இவ்வாறு மரணித்தவராவார்.
“ நேற்று (25) அதிகாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி என உறுதி செயப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி இவரது இரத்தத்தில் கிருமி நுழைந்ததினால் ஏற்பட்ட சிக்கலான நிலைமையின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையின் காரணமாகவே நோயாளி உயிரிழந்துள்ளார்” என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு மூன்று தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், முதல் இரு பரிசோதனைகளிலும் வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்படவில்லை எனவும் உயிரிழந்த நபரின் அயலவர் ஒருவர் தெரிவித்தார்.
இவர் தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் நடத்தப்பட்ட மூன்றாவது பி.சி.ஆர். பரிசோதனையின்போதே கொவிட் 19 வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
உயிரிழந்த நபர் கொள்ளுப்பிட்டியிலுள்ள மாணிக்கக் கல் விற்பனை நிறுவனம் ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வந்தவராவார். அவரது மகள் ஒருவர் இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி வருகிறார்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
– Vidivelli
கொரோனா தொற்று காரணமாக நேற்று 16 ஆவதாக உயிரிழந்தவரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது.
Reviewed by Madawala News
on
October 26, 2020
Rating: