இந்த மாவட்டத்தில் மலைபோல் குவிந்துகிடக்கும் தேவைகளை நிறைவேற்றவேண்டிய மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
“நல்லாட்சி அரசாங்கத்தில் குரல் எழுப்பமுடியுமே தவிர, எதையும் செய்யமுடியாது” எனத்
தெரிவித்த தபால் சேவைகள், வெகுஜன ஊடகத்துறை, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் (அமல்), தற்போதைய அரசாங்கத்தில் அவற்றை செய்யக்கூடிய இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வின்சன்ட் தேசிய பாடசாலையின் 200ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும் நினைவு முத்திரை வெளியீடும் இன்று (27) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வியாழேந்திரன் எம்.பி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 3 தேசிய பாடசாலைகளை விரைவாக உருவாக்குவதற்கான நடவடிக்கையை தற்போது அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. வாகரையில் 3 தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கதிரவெளி முதலாவதாக தேசிய பாடசாலையாக தரமுயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
“இந்த அரசாங்கம் பதவியேற்று சிறிய காலத்துக்குள்ளேயே 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் காரணத்தால் இந்தப் பட்டதாரிகளில் உள்ளவர்களுக்கு ஆசிரிய பயிற்சிகளை பாடரீதியாக வழங்கி, உள்ளீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“அத்துடன், க.பொ.த சாதாரண தரத்தைத் தவறவிட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
“அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருவதால், இந்த அரசாங்கத்திலே நாங்கள் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ஏனைய அமைச்சுகளுடன் இணைந்து, இந்த மாவட்டத்தில் மலைபோல் குவிந்துகிடக்கும் தேவைகளை நிறைவேற்றவேண்டிய மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்” என்றார்.
இந்த மாவட்டத்தில் மலைபோல் குவிந்துகிடக்கும் தேவைகளை நிறைவேற்றவேண்டிய மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
Reviewed by Madawala News
on
September 28, 2020
Rating: