(நா.தனுஜா)
நாட்டின் புகழ்பெற்ற றக்பி விளையாட்டுவீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான உண்மைகள்
வெளிப்படுத்தப்பட்டு, நீதி கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையை இழந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து வஸீம் தாஜுதீனின் சகோதரி அயேஷா தாஜுதீன் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் பதவியிலிருந்த போது வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான மீள் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் புதைக்கப்பட்ட அவரது உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டமை தமது குடும்பத்தாரின் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியதாக அப்பதிவில் குறிப்பிட்டிருக்கும் அயேஷா, எனினும் வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே தாம் அதற்கு உடன்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
'உங்களுடைய உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு 5 வருடங்களாகின்றன. அந்த அனுபவம் எமது மனங்களை மேலும் வேதனைப்படுத்திவிட்டது. புதைக்கப்பட்ட உங்களது உடலைத் தோண்டியெடுப்பது உங்களுடைய மரணத்திற்காக நீதியை நிலைநாட்டுவதற்கு ஓர் விஞ்ஞானபூர்வமான ஆதாரமாக அமையும் என்றுகூறி இதற்காக அம்மா, அப்பாவின் சம்மதத்தைப் பெறுவதற்கு நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம்.
இந்த உலகம் மிகவும் கொடூரமானது என்பதுடன், பெரிதாக எதனையும் எதிர்பார்ப்பதற்கில்லை. எம்மைப் பொறுத்தவரையில் அனைத்தும் நீங்கள்தான். ஆனால் இந்த உலகைப் பொறுத்தளவில் நீங்கள் வெறுமனே 'மற்றொருவர்'. நீங்கள் எப்போதும் தீராத காயத்தை எமக்குள்ளே விதைத்துச் சென்றுவிட்டீர்கள். வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் தோல்வியை சந்தித்து இன்று நின்றுகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இன்மையை நாங்கள் உணர்கின்றோம்' என்று அயேஷா தாஜுதீன் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
நீதி கிடைக்கும் என கூறி புதைக்கப்பட்டிருந்த வசீம் தாஜுதீனின் உடலை தோண்டிய நல்லாட்சி அரசாங்கம் .
Reviewed by Madawala News
on
August 11, 2020
Rating: