பாறுக் ஷிஹான்-
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாக எந்தவொரு மாநகர சபை
உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்கள் தேர்தல் நியமன சட்டங்களின் அடிப்படையில் அரசு பதவியிலோ உள்ளூராட்சி திணைக்களங்களில் ஏதேனும் பதவி நிலையில் இருப்பதை விடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள காலத்தில் மாத்திரம் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை (21) முற்பகல் மாநகர சபையின் பழைய சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற வேளை சபையில் பல உறுப்பினர்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து மேற்கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் இது தொடர்பில் குறிப்பிட்டதாவது
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக எந்தவொரு மாநகர சபை உறுப்பினர்கள் இருப்பார்கள் ஆயின் அவர்கள் தேர்தல் நியமன சட்டங்களின் அடிப்படையில் அரசு பதவியிலோ உள்ளூராட்சி திணைக்களங்களில் ஏதேனும் பதவி நிலையிலோ இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்தி தேர்தலில் போட்டியிட உள்ள காலத்தில் கட்டாய விடுமுறையை குறித்த தேர்தல் இடம் பெறும் காலம் வரை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளருக்கு சபையின் விடுமுறைக்காக அங்கிகாரத்தை பெற்று உரிய தரப்பின் ஊடாக அதை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
இதனடிப்படையில் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தொடரில் சில வேட்பாளர்கள் விடுமுறைக்கான கடிதத்தை உரிய முறையில் வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களில் சுமார் நால்வர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக பல்வேறு தரப்பில் போட்டியிடுவதாக விடுமுறைக்கு அறிக்கை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
Reviewed by Madawala News
on
May 22, 2020
Rating: