அன்புக்குரிய சகோதர சகோதரிகளே..
இன்று நாம் உலகளாவிய பாரியதொரு சுகாதாரப் பிரச்சினையொன்றுக்கு நாமெல்லாம்
முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள்.
அது கொரோனா தொற்று நோயின் பரவுகை தான் அதை நாங்கள் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டியதில்லை.
நமது இலங்கைத் திருநாட்டிலும் இந்தநோயின் பரவுகை இப்போது அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக எல்லா இந்த நோய் குறித்த அறிகுறிகள் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து இருப்பது கட்டாயம்.
உங்களுக்கு COVID-19 நோய் அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனையை நாடிப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதற்கு முதல் 1390 இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உங்கள் சொந்த மொழியில் பேச முடியும்.
மருத்துவ சேவையில் இருப்போர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அவர்கள் கொடுமைக்காரர்களோ, சூழ்ச்சிச்சிக்காரர்களோ அல்லர். மாறாக, அவர்கள் உங்களின் உயிர் காக்கும் உயிரிய சேவைக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உலகம் முழுதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிலிருந்து நாம் எல்லோரையும் காப்பாற்றுவதற்காக தமது குடும்பம், பிள்ளைகளை விட்டுத் தனித்து ஊண், உறக்கம் இன்றி அவர்கள் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எனவே நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்களைப் பீடித்துள்ள உண்மையான நோய் எது என்று கண்டு பிடிக்கவும் மருத்துவம் செய்யவும் அதிலிருந்து மீண்டு வரவும் மருத்துவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
நீங்கள் மருத்துவ உதவியை நாடாமல் மறைந்திருப்பதன் மூலம் பல நூற்றுக் கணக்கானோரின் உயிரிழப்புக்கும் ஓய் பரவுவதற்க்கும் நீங்களே காரணமாகி விடாதீர்கள். சில வேளை இதனால் பாதிக்கப்படுவது உங்கள் அன்புக்குரிய குடும்பத்தவர், உறவினராக கூட இருந்து விடலாம்.
ஆகவே எந்தவொரு தகவலையும் வைத்தியர்களிடம் மறைக்காதீர்கள். அப்படி மறைப்பதால் யாருக்கும் எந்த லாபமும் ஏற்படப் போவதில்லை. மேலும் சட்டத்தின் முன்னிலையில் அது பெரும் குற்றமாகவும் கொள்ளப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.
நம் தாய்த்திருநாட்டின் எதிர்கால சுபீட்சம், சமூக நன்னிலை என்பனவற்றைக் காத்திட ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூண்டு செயற்பட வேண்டிய தருணமிது. இந்த அனர்த்த நிலைமையில் புத்தி சாதுரியத்துடன் நடந்து நமது உண்மைத் தன்மையை நிரூபிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
VIDEO : நோய்ப்பரவலைத் தடுப்போம்; தாய்த்திருநாட்டைக் காப்போம்!
Reviewed by Madawala News
on
April 05, 2020
Rating: