கொரோனாவினால் மரணித்தவரை அடக்குவதா எரிப்பதா என்று சரியான தீர்வெடுக்காமல் வாதம் செய்து கொண்டிருந்தால், அடுத்த உடலை தகனம் செய்வதற்கு கூட ஆள் இன்றி முழு நாட்டு மக்களும் இறக்க வேண்டிய நிலைதான் வரும்.
கொரோனா வைரஸைக்கண்டு அச்சப்பட்டுக்கொண்டு அதற்கு மருந்தை தேடி தவித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள்
இப்போது கொரோனாவினால் மரணித்தவரை அடக்குவதா எரிப்பதா என்ற பிரச்சினைக்கு மருந்து தேட வேண்டியுள்ளது.
ஒரு மனிதன் மரணித்தால் அவன் உடலை எரிப்பதா அடக்குவதா என்பது மனிதன் உலகில் காலடி வைத்த காலம் முதல் இருந்து வந்த வழி முறைகளாகும்.
முதல் மனிதன் ஆதமின் சகோதரர்கள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரை மற்றவரை கொலை செய்த போது இறந்த உடலை என்ன செய்வது அவன் தவித்தது முதல் இப்பிரச்சினை ஆரம்பிக்கிறது.
இறந்த தனது சகோதரன் உடலை என்ன செய்வது என்று தெரியாத மனிதனுக்கு காகம் தனது இறந்த இன்னொரு காகத்தை மண்ணில் புதைப்பதை கண்ட ஆறறிவுள்ள மனிதன் அதே போல் மனிதனின் சடலத்தை அடக்கம் செய்தான்.
பின்னர் மனித வர்க்கம் பல்கிப்பெருகிய போது இறந்தவனை எரிப்பது, அடக்குவது, கடலில் கட்டி விடுவது போன்ற நடைமுறைகளை மனித கலாசாரங்கள் கடைப்பிடித்தன.
இறந்த சடலத்தை எரிப்பது மோசமான சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்துக்களும் உண்டு.
இஸ்லாத்தை பொறுத்த வரை முதல் மனிதன் ஆதம் முதல் இறந்த சடலத்தை மண்ணுள் புதைக்கும் நடைமுறையையே கடைப்பிடித்து வருகிறது. இறந்த உடலை எரிப்பதற்கு இஸ்லாத்தில் வழி காட்டப்படவில்லை.
காரணம் எறும்பைக்கூட நெருப்பால் சுட்டு கொல்ல வேண்டாம் என இஸ்லாம் கட்டளையிடுவதாலும் உயிருடன் உள்ள மனிதனுக்கு கொடுக்கும் மரியாதையை இறந்த மனிதனின் உடலுக்கும் கொடுக்க வேண்டுமெனவும் இஸ்லாம் சொல்கிறது.
இதன் காரணமாகத்தான் யூதனின் இறந்த உடல் கொண்டு செல்லப்பட்ட போது மதீனா ஆட்சியாளர் முஹம்மது நபி (சல்) எழுந்து நின்று மரியாதை செய்தனர். இவன் யூதன் அல்லவா என சொன்ன போது அவனும் மனிதன் என்றார்கள். இந்த சம்பவம் ஆயிரத்தி நானூறு வருடங்களாக முஸ்லிம்களின் வரலாற்று நூல்களில் உள்ளது.
இஸ்லாமிய சட்டங்கள் பெரும்பாலும் பொதுவானவை, விசேசமானவை என இருவகைப்படும். மனித உடலை சிதைக்க கூடாது என்பது பொது சட்டம். ஆனாலும் சீனி நோயால் அல்லது விபத்தால் அவதிப்படும் கை, கால்களை அகற்றத்தான் வேண்டும் என வைத்தியர் சொன்னால் அதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
எந்த உயிரையும் நெருப்பால் சுட வேண்டாம் என்பது பொது சட்டம். ஆனாலும் எதிரி துப்பாக்கியால், குண்டுகளால் சுட்டால் நாமும் எதிரியை துப்பாக்கியால் சுடலாம் என்ற அனுமதி உண்டு. துப்பாக்கி, குண்டு என்பவை எரியூட்டி கொல்வதாகும். துப்பாக்கியால் சுடுவதை அதனை கண்டு பிடித்த ஐரோப்பியர் அதை இயக்குவதை Fair சுடு என்றே சொல்கின்றனர்.
ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக இறந்த மனிதனின் உடலை வைரஸ் பரவாமல் இருக்க எரிப்பதா அடக்குவதா என்பதை பார்க்கும் போது இரண்டும் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் சொல்கிறது.
எரிப்பதால் கிருமி பரவுவதை தடுக்க முடியுமா அடக்குவதால் தடுக்க முடியுமா?
இதற்கு மருத்துவர்களிடையே ஒத்த கருத்தை காண முடியவில்லை. எரிப்பதால் அதிக வெப்பம் காரணமாக கிருமி பரவுவதை தடுக்கலாம் என ஒரு சாராரும் கொரோனா கிருமி அதி சக்தி வாய்ந்தது என்பது புகை ஊடாக காற்றில் பரவு மனிதர்களுள் புகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
புதைப்பதால் அதுவும் பெட்டியில் உடல் வைக்கப்பட்டு ஆழமாக புதைக்கப்பட்டால் வைரஸ் சூழலை பாதிக்காது என்போரும் உண்டு. உடலிலிருந்து வெளியாகும் வைரஸ் நீரில் கலக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும் உடலில் உள்ள கொரோனா மூன்று நாட்களுக்கே வாழும் என்பதால் பெட்டிக்குள் வைத்து ஆழத்தில் புதைக்கப்பட்ட உடலின் சவப்பெட்டி இறப்பதற்கு பல வாரங்கள் எடுக்கும் என்பதால் கிருமி நீரில் கலக்கும் சாத்தியம் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இவற்றில் எதன் மூலம் வைரசை கட்டுப்படுத்தலாம் என்பதை இத்தாலியில் அடக்கப்பட்ட, எரிக்கப்பட்ட சூழலின் முடிவை வைத்தே சொல்ல முடியும். ஆனாலும் இன்று வரையான தகவலின் படி எரித்தாலும் புதைத்தாலும் வைரஸ் வெளியே பரவவில்லை என்றே தெரிகிறது.
நமது நாட்டை பொறுத்தவரை இயந்திரத்தின் மூலம் உடலை எரிக்கும் சாதனம் எல்லா இடங்களிலும் இல்லை. கொழும்பு, கண்டி போன்ற சில இடங்களில் மட்டுமே உண்டு. இந்நிலையில் எரிக்கத்தான் வேண்டும் என்றால் ஒரு மாவட்டத்தில் இறந்த உடலை இன்னொரு மாவட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இது மேலும் வைரஸ் பரவ காரணமாகும். விறகால் எரிக்க முணைந்தால் அது கொரோனா வைரசை சந்தோசமாக சூழலுக்கு பரவச்செய்வதாகும். விறகால் ஓரிரு நிமிடத்தில் உடலை தகனம் செய்ய முடியாது.
ஆகவே இவற்றுக்கு என்ன தீர்வு.
ஒரேயொரு தீர்வுதான் உண்டு. இறந்தவரின் உடலை என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை அந்த இறந்தவரின் உறவினருக்கு அரசாங்கம் வழங்க வேண்டும். தகப்பனுக்கு மகன், கணவனுக்கு மனைவி போன்ற நெருக்கமான உறவுக்கு இந்த உரிமையை வழங்கினால் இதனை பிரச்சினை இல்லாமல் முடிக்கலாம். அவ்வாறின்றி இதனை வாத விவாதமாக்கினால் இதற்குத்தான் தீர்வு தேடுவதில் நேர காலம் செல்லுமே தவிர கொரோனாவுக்கு தீர்வு கிடைக்காமல் போய் இறந்த அடுத்த உடலை தகனம் செய்வதற்கு கூட ஆள் இன்றி முழு நாட்டு மக்களும் இறக்க வேண்டிய நிலைதான் வரும்.
இது விடயத்தில் நிர்வாகத்திறமையும், சாதுர்யமும், திட்டமிட்டு காரியமாற்றும் ஆற்றலும் கொண்ட ஜனாதிபதி அவர்கள் மேலே சொன்ன தீர்வை அறிவிக்க வேண்டும் என உலமா கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
- முபாறக் அப்துல் மஜீத
கொரோனாவினால் மரணித்தவரை அடக்குவதா எரிப்பதா என்று சரியான தீர்வெடுக்காமல் வாதம் செய்து கொண்டிருந்தால், அடுத்த உடலை தகனம் செய்வதற்கு கூட ஆள் இன்றி முழு நாட்டு மக்களும் இறக்க வேண்டிய நிலைதான் வரும்.
Reviewed by Madawala News
on
April 04, 2020
Rating: