ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
இந்தியாவிடம் எமது நாட்டின் கடன் தவணையை செலுத்த மேலும் கால அவகாசம் கேட்டதில்
எந்த தவறும் இல்லை. என்றாலும் அதனை பகிரங்கப்படுத்தியதன் மூலம் எமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக JVPயின் பாரளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பாரிய பொருளாதாரப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் வெளிநாடுகளுக்கு அதிகூடிய பாரியதொரு கடன் தொகையை நாடு செலுத்த வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடனின் தவணையை குறிப்பிட்ட காலத்துக்கு பிற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பார். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கடன் தவணையை பிற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்ததாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
இது எமது நாட்டின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏறபடுத்தும் செயலாகும். பெற்ற கடனை உரிய தவணைக்கு செலுத்த முடியாத நாடு என்ற பெயர் சர்வதேசத்துக்கு இதன்மூலம் இலங்கையின் வங்குரோத்து நிலை அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந் நடவடிக்கையால் கடன் உதவியை தந்திருக்கும் ஏனைய நாடுகளும் தற்போது அச்சமடைந்து நமது நாட்டுக்கு கொடுத்த கடனை விரைவாக பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார்.
நாட்டின் நற்பெயருக்கு மகிந்த களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் என JVP குற்றச்சாட்டு.
Reviewed by Madawala News
on
February 13, 2020
Rating: