உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் 80% நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,
மிக விரைவில் விசாரணைகளை நிறைவு செய்துசட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட மா அதிபருக்கு குறித்த விசாரணை அறிக்கையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் மாலைதீவு பிரஜைகள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்புப் பயிற்சிபெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில். நிறைவுபெற்ற 10 மாத காலத்தில் இலங்கை பொலிஸார், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றகரத்தன்மை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு நேற்று பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
இந்த ஊடக பிரிவில் கலந்துகொண்டு தெளிவுபடுத்துகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதராட்சி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஒரு வருட காலம் பூர்த்தியாகவுள்ளது. மூன்று வழிபாட்டுத் தலங்கள், 3 நட்சத்திர ஹோட்டல்கள், மேலும் 2 இடங்களில் அடிப்படைவாதிகள் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாறி தாக்குதல்களை குறுகிய நேரத்துக்குள் நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலினால் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் 590 பேர் காயமடைந்தனர்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினர், பொலிஸார் துரிதமான விசாரணைகளை முன்னெடுத்தார்கள். இதனடிப்படையில் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் பெண்கள். 216 பேரில் 153 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கும், தொழில்நுட்ப வசதிகளை விசாரணை நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கும் சர்வதேச பொலிஸார், ஐக்கிய அரபு இராஜ்ஜிய விசாரணைப் பிரிவு, அவுஸ்ரேலியாவின் பெடரல் தொடர்பு, இலங்கையின் தடயவியல் துறைசார் நிபுணர்கள், உள்ளிட்ட பல்தரப்புத் துறைசார் நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணை நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டன.
பயங்கரவாதி ஸஹ்ரானுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பைக் கொண்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 6 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளார்கள் என்ற அடிப்படையில் 4 மாலைதீவு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவரின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மிகுதி இருவர் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களினதும், சந்தேகத்தின் பெயரில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களினதும் 3000க்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. இணையம் மூலம் மேற்கொள்ளும் உரையாடல்கள் தொடர்பில் ஆராய ஏஎப்பி, மற்றும் எப்.பி. ஐ ஆகிய நிறுவனங்களின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது தனிப்பட்ட சாட்சியம், விஞ்ஞான தொழில்நுட்ப சாட்சியம் உள்ளிட்ட விடயங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டன. வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைப்பு உள்ளிட்ட இரு சம்பவங்களும் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளன என்பது இதுவரையான விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட சம்பவமாகும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 42 பேரில், 21 பேர் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான பயங்கரவாதி ஸஹ்ரானுடன் பல்வேறு விடயங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்.
தற்கொலைக் குண்டுதாரிகளினதும் அவர்களின் உறவினர்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிக்கணக்குகள் , அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு நீதிமன்றத்தின் அனுமதியுடன் வங்கிக்கணக்குகளின் செயற்பாடுகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து டி- 56 ரக துப்பாக்கி 3, மைக்ரோ துப்பாக்கி 1, ரிவோல்வர், 55,20000 ரூபா பணம், 23,500 அமெரிக்க டொலர்கள்,19 பவுண் தங்கம், 113 ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகள், 22 கணினிகள், 29 மடிக்கணினிகள், 01 ஐ-பேட், 02 மோட்டார் கார், 01 முச்சக்கர வண்டி, 01 மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், மற்றும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் 11 விசேட குழுவாகப் பிரிந்து பல்வேறுபட்ட விதத்தில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஆணைக்குழுக்களின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் தெரிவு செய்யப்பட்ட தகவல்கள் மாத்திரமே குறிப்பிட முடியும். இதனடிப்படையில் 80 சதவீதமான விசாரணை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன என்றார்.
(இராஜதுரை ஹஷான்) Metro
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளில் 80% நிறைவு பெற்றுவிட்டன.
Reviewed by Madawala News
on
February 20, 2020
Rating: