உயிர்த்த ஞாயிர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் .
(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய
பிரதான பயங்கரவாதியான ஸஹ்ரான் ஹாஷிமின் பிரதான இரு சகாக்களை ஐக்கிய அரபு அமீரகம் சென்று கைது செய்துள்ள சி.ஐ.டி. சிறப்புக்குழு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டிலிருந்து தப்பியோடியதாகக் கூறப்படும் இருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர்களை 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நேற்று பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நான்கு நாட்களுக்கு முன்னர், சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேன தலைமையில் பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார மற்றும் சார்ஜன்ட் நத்தலால் உள்ளிட்ட குழுவினர் இவர்களைக் கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையிலேயே அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் குறித்த இருவரையும் கைது செய்துள்ள அவர்கள், சந்தேக நபர்களை துபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்து வந்தனர்.
நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த 30 வயதான மொஹம்மட் சலீம் அப்துல் சலாம்,
ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதான மொஹம்மட் சஹான் மொஹம்மட் றியாஸ்
ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு துபாயிலிருந்து அழைத்து வரப்பட்டு தடுப்புக்காவலில் விசாரணைகள் இடம்பெறுவதாக நான்காம் மாடியின் குறித்த உயர் அதிகாரி கூறினார்.
நேற்றைய தினம் அவ்விருவரும் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் முன்னிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டு அறிக்கையும் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாடுகளில் இருந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் 6 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவருடன் சேர்த்து அந்த எண்ணிக்கை தற்போது எட்டாக உயர்ந்துள்ளது.
இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 65 பயங்கரவாத சந்தேக நபர்கள் உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புபட்டமை, உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகளின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, கடந்த ஜூன் 14 ஆம் திகதி 5 பயங்கரவாத சந்தேக நபர்களை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து சி.ஐ.டி. நாட்டுக்கு அழைத்து வந்தது.
30 வயதான புதிய காத்தான்குடி – 2 எனும் முகவரியைச் சேர்ந்த தேசிய தெளஹீத் ஜமாத்தின் ஆயுத பிரிவுத் தலைவனாக கருதப்படும் ஹயாது மொஹம்மட் அஹமட் மில்ஹான் அல்லது மொஹம்மட் மில்ஹான், 34 வயதான மருதமுனை – 3 ஐச் சேர்ந்த மொஹம்மட் மர்சூக் மொஹம்மட் ரிழா, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 47 வயதான மொஹம்மட் முஹிதீன் மொஹம்மட் சன்வார் சப்றி, 29 வயதான காத்தான்குடி – 1 ஐச் சேர்ந்த மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் இல்ஹாம், , அனுராதபுரம் கெப்பித்திகொல்லேவைச் சேர்ந்த 37 வயதான அபுசாலி அபூபக்கர் ஆகிய ஐந்து பயங்கரவாத சந்தேக நபர்களே சவூதியில் இருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களாவர்.
அதன் பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த சமத் எம் றியாஸ் எனும் சந்தேக நபர் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டிருந்தார். ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராகக் கருதப்படும் ஒருவரை, 21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தார் பொலிஸார் கைது செய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் எனும் குறித்த சந்தேக நபரே இவ்வாறு கத்தார் பொலிஸ் நிலையம் ஒன்றால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் தேசிய தெளஹீத் ஜமா அத் முக்கிய உறுப்பினர் பஸ்ஹுல் ஸஹ்ரானும் குறித்த சந்தேக நபரும் கட்டாரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேணியுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், கட்டாரில் தடுப்பில் உள்ள சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரிக்கும் பணிகளை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியிலேயே கத்தாரில் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப்புடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மாவனெல்லையைச் சேர்ந்த சமத் மொஹம்மட் றியாஸ் என்பவர் கத்தார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதம் தடுப்புக் காவல் விசாரணைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி சி.ஐ.டி. விமான நிலையத்தில் வைத்து கைது செய்து தற்போது பயங்கரவாத தடை ச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
-மெட்ரோ -
உயிர்த்த ஞாயிர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் .
Reviewed by Madawala News
on
January 16, 2020
Rating: