இலங்கை கால்பந்தாட்ட அணியை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லமுடியாமல் பலத்த சவாலையும்
விமர்சனங்களையும் எதிர்நோக்கிவரும் தலைமைப் பயிற்றுநர் நிஸாம் பக்கீர் அலிக்கு, சிறந்த பெறுபெறுகளைப் பெற்றுவதற்கான கடைசி வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
2022 உலகக் கிண்ணம் மற்றும் 2021 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான இணை தகுதிகாண் போட்டிகளிலும் மோசமான பெறுபேறுகளை சந்தித்த அவரது பயிற்றுவிப்பிலான இலங்கை அணி, இம் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து தங்கக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது.
இப் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஏ குழுவில் பலஸ்தீனம், பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் இலங்கை மோதவுள்ளது.இந்தப் போட்டியில் அவர் எத்தகைய பெறுபேறுகளை ஈட்டிக்கொடுத்தாலும் அவரது பயிற்றுநர் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் எனவும் வெளிநாட்டுப் பயிற்றுநர்கள் குழாம் நியமிக்கப்படும் எனவும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.
உலகக் கிண்ண மற்றும் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டி ஜூன் மாதம் 4ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது அப்போது புதிய பயிற்றுநரின்கீழ் இலங்கை அணி பயிற்சி பெறும் என்றார் அவர்;.இலங்கை தேசிய அணியின் வீழ்ச்சிக்கு வீரர்கள் காரணமா? பக்கீர் அலியின் பயிற்றுவிப்பு காரணமா? என்பதை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள் தெளிவுபடுத்த தயங்குகின்றனர். எனினும் பக்கீர் அலியின் பிடிவாதப் போக்கே இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என கால்பந்தாட்ட அணி முகாமைத்துவத்துடன் தொடர்புபட்டிருந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இலங்கை கால்பந்தாட்ட அணியின் பயிற்றுநராக பக்கீர் அலி 2018 பெப்ரவரி மாதம் பதவி ஏற்ற பின்னர் கடந்த வருட இறுதிவரை இலங்கை விளையாடிய 23 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.நான்கு போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட இலங்கை, ஏனைய போட்டிகளில் தோல்விகளைத் தழுவியது. இந்த 23 போட்டிகளில் 5 கோல்களை மாத்திரமே போட்டுள்ள இலங்கை, எதிரணிகளுக்கு 62 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.
மேலும் ஒரு வருட காலமாக குழாத்தில் இடம்பெற்று பயிற்சியில் ஈடுபட்டு வந்த சில வீரர்களை அவர்களில் ஆற்றல் இல்லை எனத் தெரிவித்து நீக்கியிருந்தார்.இலங்கையின் முன்னாள் தேசிய வீரரான பின்களத்திலும் மத்தியகளத்திலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியதை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. அத்துடன் பங்களாதேஷில் ஒரு சிறந்த கழக மட்ட வீரராகவும் பயிற்றுநராகவும் பங்களாதேஷியர்களால் போற்றிப் புகழப்பட்ட பக்கீர் அலியினால் இலங்கை அணியை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியாமல் போனமை வியப்புக்குரியதாகும்.
இந்நிலையில் அடுத்த தெற்காசிய விளையாட்டு விழா கால்பந்தாட்டப் போட்டியை இலக்கு வைத்து வெளிநாட்டு பயிற்றுநர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஜேர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த பயிற்றுநர்களுடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் கலந்து ரையாடி வருகின்றது.
metro
பயிற்றுநர் பக்கீர் அலிக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது.
Reviewed by Madawala News
on
January 14, 2020
Rating: