இராணுவச் சிப்பாய் ஒருவரைத் தாக்கினார்கள் எனக் கூறப்படுபவர்களில் பிரதான சந்தேக நபரைக் கைது
செய்யும் நோக்குடன் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி இன்று (16) வியாழக்கிழமை அதிகாலை 3 மணி தொடக்கம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று தைப்பொங்கல் தினத்தன்று பிற்பகல் இராணுவச் சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்ட நிலையிலேயே இந்தச் சொதனை முன்னெடுக்கப்பட்டது.
வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்தார் என குறித்த இராணுவ சிப்பாய், நபர் ஒருவரை கண்டித்துள்ளார். அதன்போது அந்நபரின் உறவினர்கள் அங்கு கூடி குறித்த இராணுவச் சிப்பாயுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்துள்ளனர்.
இநிலையில் சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொண்டரைக் கைது செய்யும் நோக்குடன் அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன. நாகர்கோவில் பகுதியிலிருந்து எவரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து எவரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இராணு வீரரைத் தாக்கினார்கள் என்ற சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார், பிரதான சந்தேக நபரை கைது செய்யும் நோக்குடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவ வீரரை தாக்கிய சம்பவம்..... இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுப்பு.
Reviewed by Madawala News
on
January 16, 2020
Rating: