புதிய வகை மா இனம் ஒன்று ஆராய்ச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி.
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, தெரிவித்துள்ளார்.
பல்லாண்டு தாவரங்களை இனங்கண்டு அவ்வாறு இனங்காணப்பட்ட தாய்த்தாவரங்களை நாற்றுக்கள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக மாகாண விவசாயத்திணைக்களத்தினருடன் இணைந்து திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தினர் மாவட்ட செயலகத்தின் நிதியுதவியுடன் 2005,2006 ஆம் ஆண்டுகளில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த ஆய்வில் பலதரப்பட்ட மாங்கன்றுகளும், பலாக்கன்றுகளும் தாவர ரீதியில் ஆராயப்பட்டு சிறப்பான கன்றுகள் தெரிந்தெடுக்கப்பட்டது. கறுத்தக்கொழும்பான் மா இனத்தில், பழத்தில் உள்ள நார்பற்று, தோலின் நிறம், பழத்தின் இனிப்புச்சுவை, வாசம் போன்றன கருத்தில் கொள்ளப்பட்டு மூன்று தாய்த்தாவரங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. அவ்வாறே விலாட் இனத்தில் இரண்டு இனங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன.
ஆய்வுக்கு உட்பட்டபோது எதேச்சையாக புதியதொரு குணாம்சங்களுடன் ஒரே வகையான இரண்டு தாய்தாவரங்கள் கண்டறியப்பட்டன. அவற்றை ஆராய்ந்த போது இப்பழங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தன. இப்பழமும் மரமும் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக ஏனைய பழமரங்களின் குணாம்சங்களைவிட பலவகையில் வேறுபட்டதாக காணப்பட்டது.
பழங்களின் வடிவம், பருமன், சதைப்பற்று, நார்பற்று, சுவை மற்றும் தனித்துவமான நறுமணம் என்பன துல்லியமான வேறுபாடுகளைகாட்டி நின்றன. இந்த ஆராய்ச்சியின் விளைவாக இத்தாய்த்தாவரத்திலிருந்து ஒட்டுக்கிளைகள் கொண்டுவரப்பட்டு கன்றுகள் உருவாக்கப்பட்டன. விவசாய ஆராய்ச்சி நிலையத்திலும், மாவட்ட விவசாயப் பண்ணையிலும் கன்றுகள் நாட்டப்பட்டன.
அந்தக் கன்றுகள் வளர்ந்து தற்போது காய்த்துக் குலுங்குகின்றன. இம்மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி வளர்ந்திருப்பதனால் படரும் செடியைப்போல் காட்சியளிக்கின்றன. மேலும் இந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்த இனம் வருடம் முழுவதும் காய்க்கும் தன்மை கொண்டதாகவும் போதுமானளவு குறிப்பிடக்கூடியளவு பழச் சாற்றைக் கொண்டதுடன் விசேடித்த நறுமணமுள்ள சதைப்பற்றுடன் சாதாரண பருமனைக் கொண்ட பழமாக அறியப்பட்டது.
ஒவ்வொரு பழமும் சராசரியாக 280 தொடக்கம் 450 கிராம் நிறை வரை இருந்துள்ளது. பழுக்கும் போது பழம் முழுவதும் மஞ்சள் நிறமாவதுடன் பார்வைக்கு மிகவும் அழகானதாகவும் தென்படும். நன்றாகப் பழுத்த மாம்பழங்களை 3-5 நாட்கள் வரை பழுதடையாமலும் பாதுகாக்கலாம். மேலும் இம்மாங்கன்றுகள் வீட்டுத்தோட்ட வளர்ப்பிலும் வறள்நில பிரதேசங்களிலும் நல்லபயனைத்தரும் என நிரூபணமாகியுள்ளது.
கடந்த 09.01.2020 அன்று விவசாயத்திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற இன வெளியீட்டுகுழுவின் வருடாந்த கூட்டத்தில் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்பட்டதனையடுத்து இப்புதிய மா இனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில் வெற்றிகண்ட கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) இப்புதிய மா இனத்தை திருநெல்வேலி மஞ்சள் என்று அழைக்கலாம் என பரிந்துரைத்துள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட திருநெல்வேலி வெள்ளை (பாகல்), திருநெல்வேலி நீலம் (புடோல்), திருநெல்வேலி நாவல் (கத்தரி), திருநெல்வேலி சிவப்பு (சின்னவெங்காயம்), போன்ற வரிசையில் இம் மா இனமும் திருநெல்வேலி மா – 01 என பெயரிடப்பட்டுள்ளது.
இம் மா இனத்தை உருவாக்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் மாகாணசபை விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஏனைய விஞ்ஞானிகளுக்கும் இக்கருத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய அப்போதைய அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு.கணேஸுக்கும் கலாநிதி சி.ஜே.அரசகேசரி, மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
இப்புதிய மா இனத்தில் கன்றுகள் இப்போது உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பதனால் விரைவில் இந்த இனத்தின் கன்றுகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
metro
2005 முதல் ஆராய்ச்சி மேற்கொண்டு சுவையுடன் தனித்துவமான நறுமணம் கொண்ட புதிய மாம்பழ இனம் அறிமுகம்!
Reviewed by Madawala News
on
January 16, 2020
Rating: