கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இந்த நாட்டில் மிக இக்கட்டான
நிலையில் தள்ளப்பட்ட சமூகம் என்றால் அது முஸ்லிம் சமூகம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு முன்னர் சஹ்ரான் என்ற நாமத்தை எந்த ஒரு இடத்திலும் நான் உட்பட 90% ஆன முஸ்லிம்கள் தங்களின் காதுகளினால் கேள்வியுற்றதே கிடையாது என்பதே உண்மை. ஆனால் இந்த சஹ்ரான் செய்த காரியத்தால் முழு முஸ்லிம் சமூகமே வெட்கி தலைகுனிந்து நின்றது.
தங்களை முஸ்லிம் என்று சொல்லவே பீதியடைந்த அதிகமான சகோதர சகோதரிகள் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் பீதியின் உச்சத்தில் ஒடுங்கி இருந்தமை இன்னும் எம் கண்ணை விட்டு மறையவில்லை. முஸ்லிம்களின் தலைமைகள் என்று கூறும் அதிகமானவர்கள் வாய் திறக்க முடியாமல் மௌனியாக இருந்தனர். காரணம் அவர்கள் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டே இருந்தமை ஆகும்.
நமது வீடுகள் பொலிஸ் மற்றும் இராணுவம், கடற்படை என பலராலும் சோதனை இடப்பட்டது. அந்த நேரம் ஒரு சிலரை தவிர அதிகமான பாதுகாப்பு உதியோகத்தர்கள் முஸ்லிம் மக்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு பக்குவமாக செயற்பட்டனர். அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உண்டு. சிலர் வரம்பு கடந்து போகவே அந்த நேரமும் இந்த ஹக்கீம் தான் குரல் கொடுத்தார் என்பதை நாம் மறந்திருக்க முடியாது.
முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ரவூப் ஹக்கீமின் குரல் மாத்திரமே அந்த நேரம் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு சமாதான நிலையை உருவாக்க கூடியதாக இருந்தமையால் அனைவரும் ஹக்கீமின் கருத்தையும் அவரது செயற்பாட்டையும் மெச்சினோம். பிறகு அனைத்து முஸ்லிம் தலைவர்களும் ஒன்றாக தங்களது பதவிகளை இராஜினாமா செய்து அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தத்தை பிரயோகித்தனர்.
இன்று ஒரு போட்டோ உலா வருகிறது அதில் ஹக்கீம் சஹ்ரானுடன் இருக்கிறார் அதை சில விஷமிகள் பெரிதாக பிதட்டுகின்றனர். ஒரு அரசியல்வாதி எவனுடனும் பேசாமல் போக முடியாது. இது ஹக்கீமுக்கு விதி விலக்கல்ல. இந்த போட்டோவை தற்போது பதிவேற்றம் செய்பவர்கள் ஏன் அந்த நேரம் பதிவேற்றம் செய்யவில்லை?
ரவூப் ஹக்கீம் எனும் தனி மனிதனை தாக்குவதாக நினைத்து கொண்டு தயவு செய்து முஸ்லிம் சமூகத்தை சீரழிக்கும் கேவலமான செயலை செய்ய வேண்டாம் சகோதரர்களே. ஏற்கனவே பல குடும்பங்கள் தங்களின் ஆண்களை இழந்து சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதனை நான் தினமும் கண்களால் காண்கிறேன். தேவை இல்லாமல் பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பாமல் இருங்கள். இன்று முஸ்லிம்களுக்கு தேவை பாதுகாப்பு மாத்திரம்தான் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
இது எமது நாடு, இந்த நாட்டில் நாம் அனைவருடனும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும். நான் தம்மழன், நான் சோனி, நான் சிங்களவன் என்ற வேறுபாட்டை கலைந்து நாம் அனைவரும் இலங்கையர் எனும் நிலையை புரிந்து கொள்வோம்.
ஹக்கீமை மாட்டி விடுவதாக நினைத்து கொண்டு இந்த சமூகத்தை மீண்டும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி விடாமல் இருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.
-சட்டத்தரணி இயாஸ்தீன்-
மீண்டும் ஒரு சஹ்ரான் காலத்தை உருவாக்க வேண்டாம்.
Reviewed by Madawala News
on
October 19, 2019
Rating: