எம்.மனோசித்ரா
அமைச்சர்களதும் அரசியல்வாதிகளினதும் சுகபோக வரப்பிரசாதங்களை மட்டுப்படுத்துவதன்
மூலம் தேர்தல் பிரசாரங்களின் போது தன்னால் வழங்கப்படுகின்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான நிதியை பெற்றுக் கொள்ள முடியும். எனவே மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளை அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை யடிநுவர - கடுகன்னாவ சுனில் எஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரம் தரமுயர்த்தப்படும். நவம்பர் 16 ஆம் திகதி அதி கூடிய வாக்குகளால் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்ததன் பின்னர் வறுமையிலிருக்கும் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூர்த்தி வேலை திட்டம் மேம்படுத்தப்படும்.
அத்துடன் எனது தந்தை அறிமுகப்படுத்திய ஜனசவிய வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். 44 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும் இரு இலவச சீருடைகளும், சத்துணவும் வழங்கப்படும். மேலும், நான் எனது குடும்பத்துக்காக தேர்தலில் போட்டியிடவில்லை. நாட்டு மக்களுக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்றார்.
அத்தோடு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு விஷேட சலுகை வழங்க்கப்படும் எனவும், மேலும் தேயிலை உற்பத்தி மாத்திரமின்றி ஏனைய உற்பத்திகளுக்கும் நிர்ணய விலையொன்று ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளிக்கின்றேன். எனது பிரதிவாதி வேட்பாளருக்கு தற்போது அடிக்கடி வார்த்தைகள் தடுமாறுகின்றன. உர மானியத்தை விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறும் அவர் உரத்தின் விலையைக் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை.
தற்போது மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டை விடவும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதை விடவும் மேலும் விலை குறைக்கப்படும் என்று உறுதியளிக்கின்றேன் என்றார்.
மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளை அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்
Reviewed by Madawala News
on
October 20, 2019
Rating: