இப்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் முழுமையான ஆதரவு எமக்கு உள்ளது
ஆர்.யசி
ஐக்கிய தேசிய கட்சி குடும்ப அரசியல் செய்யும் கட்சி அல்ல, ஜனநாயக கட்சியாக நாம் ஆட்சி செய்கின்ற
காரணத்தினால் எமக்கு ஆதரவு வழங்கிய சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியே எமது ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்போம்.
இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், முஸ்லிம் பிரதிநிதிகளினதும் முழுமையான ஆதரவு எமக்குக் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கின்றது. அவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளை இணைத்துக்கொள்வதில் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து வினவிய போதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இவற்றை கூறினர்.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகையில்.
ஒவ்வொரு முறையும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னரே எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவித்தோம். இம்முறையும் நாம் அவ்வாறே அறிவிப்போம்.
இம்முறையும் சகல கட்சிகளும் எம்முடன் இணையும். தமிழ் தரப்பினர், முஸ்லிம் கட்சிகள் அனைவரும் எமக்கு ஆதரவை வழங்குவார்கள். தமிழர் தரப்பினை நம்பிக்கையை வென்ற கட்சியாக இன்றும் ஐக்கிய தேசிய கட்சியே உள்ளது. அதேபோன்று எமது ஆட்சியில் தமிழர்களை புறக்கணித்த தனித்த பயணத்தை நாம் ஒருபோதும் முன்னெடுத்ததில்லை.
பிரதமராக இருந்தாலும் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருந்தாலும் நாமே வடக்கு கிழக்கில் சென்று மக்களை சந்தித்து அவர்களின் நல்லது கெட்டதை எல்லாம் அறிந்துகொள்கிறோம். ஆகவே குறைகள் அதிருப்திகள் இருந்தாலும் தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் ஆதரவை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் எம்முடன் இணையாது போனாலும் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை எமக்கு பெற்றுக்கொடுத்த கட்சிகளாகும். அவர்கள் இம்முறையும் எமக்கு ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
மலையக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எமது அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு வேறு எந்த அரசாங்கமும் செய்யாத பல வேலைத்திட்டங்களை அம்மக்களுக்காக செய்துள்ளனர். ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி எமக்கான ஆதரவை நாம் பெற்றுக்கொவோம் என்றார்.
இது குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில்,
அனைவரும் இணைந்து கட்சியை எவ்வாறு வெற்றிபெற செய்வது என்பது குறித்தே நாம் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம். முதலில் எம்முடன் இணைய ஆர்வம் காட்டும் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணியை அமைத்துவிட்டு பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தீர்மானத்தை முன்னெடுப்போம் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.
அதற்கமைய எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பும் மற்றும் எமக்கு தேர்தலில் ஒத்துழைப்புகளை வழங்கும் கட்சிகளின் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதையே முதலில் கவனிக்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துள்ள சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் ஆதரவில் தனித்து இயங்கும் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கடந்த தேர்தல்களில் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கிய நபர்கள். ஆகவே அவர்களின் விருப்புகள், நிலைப்பாடுகள் என்ன எனது கவனத்தில்கொள்ள வேண்டிய விடயமாகும்.
ஜனாதிபதி வேட்பாளர் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் குடும்ப பிரச்சினை அல்ல, இது கட்சியாக அடுத்து ஆட்சியை தக்கவைக்க அனைவரும் இணைந்து சிந்தித்து முன்நகர வேண்டிய விடயம். அதில் சகல தரப்பின் விட்டுக்கொடுப்பும் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் அவசியமாகின்றது. மாற்று அணியில் குடும்ப பிரச்சினையே உள்ளது. அவர்கள் குடும்பமாக அமர்ந்து அவர்களின் வேட்பாளர் அண்ணனா தம்பியா என்பதை தீர்மானிக்க முடியும்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டின் சகல இன மத மக்களையும் உள்ளடக்கிய கட்சியாகும். இங்கு அவ்வாறு தீர்மானங்கள் எடுக்க முடியாது. விவசாயியை ஜனாதிபதியாக்கிய கட்சி எமது கட்சி. ஆகவே எமக்கு வேட்பாளர் குறித்து அதிக அக்கறையும் கவனமும் உள்ளது. இம்முறை தேர்தலில் ஜனநாயகத்தை விரும்பும் சகல கட்சிகளின் ஒத்துழைப்பும் எமக்குக் கிடைக்கும்.
அதேபோல் இப்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் முழுமையான ஆதரவு எமக்கு உள்ளது. இம்முறை தேர்தலில் அனைவரதும் ஒத்துழைப்புடன் பாரிய வெற்றியை நாம் பெற்று அடுத்த அரசாங்கத்தையும் நாம் கொண்டு செல்வோம். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என்றார்.
இப்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் முழுமையான ஆதரவு எமக்கு உள்ளது
Reviewed by Madawala News
on
September 13, 2019
Rating: