மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு புறம்பாக ஆரம்பிக்கப்பட்டதற்கான தகுந்த
ஆதாரங்கள் கிடைத்துள்ள போதிலும், அந்த நிறுவனம் மீது அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக இந்த தனியார் பல்கலைகழகத்தை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பகல் 2 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
இந்த மாபெரும் மக்கள் பேரணிக்கு ஆயிரக் கணக்கான தமிழ், சிங்கள மக்களை மட்டக்களப்பு கிரான் சந்தியில் அணித்திரளுமாறு அழைப்பதாகவும் இந்த பேரணியில் புதிய 'நாட்டை பாதுகாக்கும் அமைப்பை' மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள சதாம் செவன பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;
முஸ்லிம் தலைவர்களுக்கு ஏற்றவகையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. வைத்தியர் ஷாபியை கைது செய்தாலும், அவர் மீது முறையான விசாரணைகள் இடம்பெற வில்லை. வைத்தியர் ஷாபி மீது சட்ட நடவடிக்கை எடுத்தமையினால் அரசியல் தலையீட்டின் மூலம் தற்போது பிரதி பொலிஸ் மா கித்சிறி ஜயலத் மற்றும் அத்தியட்சர் மஹிந்த திஸாநயக்க ஆகியோர் இடமாற்றம் செயப்பட்டுள்ளனர்.
மறுபுறம் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்தின் நடவடிக்கைகளுக்காக கோடி கணக்கான ரூபாய் வெளிநாட்டு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு நிதி கைமாறு செய்யப்பட்டுள்ளது என்று அறிந்திருந்தும், இதுவரையில் அந்த நிதி எந்த நிறுவனத்திடமிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது, எவ்வாறு கொண்டுவரப்பட்டது ஆகியன தொடர்பில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படாத நிலைமையே காணப்படுகிறது.
இது பாரதூரமான பிரச்சினையாகும். இந்த நிறுவனத்தை அரசிடம் ஒப்படைக்க ஹிஸ்புல்லா தயாராக இல்லை. ஆகவே மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்தை அரசுடமையாக்குமாறு கோரியும், வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் மக்கள் பேரணியை நடத்த தீர்மானித்துள்ளோம்.
பெட்டி கெம்பசுக்கு எதிராக மட்டக்களப்பு கிரானில் மாபெரும் பேரணி
Reviewed by Madawala News
on
August 16, 2019
Rating: