பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவை மீறி நாட்டின் பல்வேறு
பகுதிகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாபை கழற்றிவிட்டுப் பரீட்சை எழுதுமாறு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜிதவுக்கு முறைப்பாடு செய்துள்ளது.
கண்டி விவேகானந்த கல்லூரி மற்றும் மன்னார் முருங்கன் பெரிய கண்டல் தமிழ் மகா வித்தியாலயத்திலுள்ள பரீட்சை நிலையங்களிலே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாபை அகற்றிவிட்டு பரீட்சை எழுதுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் இதனைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜிதவின் நேரடிக் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
ஹிஜாப் அணிந்து வருவோருக்கு காதுகளை காண்பித்துவிட்டு பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்க வேண்டும் என தாம் பணிப்புரை விடுத்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கண்டி விவேகானந்த கல்லூரி பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாபை அகற்றி பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சை மேற்பார்வையாளர்கள் கேட்டது தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸில் மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோனது அவதானத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
கண்டி, முருங்கன் பரீட்சை மண்டபங்களில் பர்தா நீக்கம் முஸ்லிம் கவுன்ஸில் ஆணையாளரிடம் முறைப்பாடு.
Reviewed by Madawala News
on
August 20, 2019
Rating: