இலங்கையின் 1971 ம் ஆண்டின் 29 ம் இலக்க புனித நாட்கள்( Holiday)அல்லது போயா நாட்கள் சட்டத்தில் சில நாட்களை புனித நாட்களாக அரசினால் குறிப்பிடப்பட்டு அதில் செய்யக்கூடாத வேலைகளை வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இச்சட்டத்தின் பிரிவு 13 (a),(b),(c) (d) படி குறித்த போயா தினத்தில்
இரவு விடுதி (night club),நடன அரங்கு (dancehall),பொதுவெளியரங்கு ,மதுசாலைகள்,
கள்ளுத்தவரனைகள்,குதிரை ஒட்டுக்கட்டுமிடங்கள்,சூதாட்டக்கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகள் என்பன வியாபாரத்திற்காக திறந்திருக்கக்கூடாது.
மேலும் பிரிவு 14 படி "குறிப்பிட்ட தினத்தில விற்கும் நோக்கத்திற்காக எதாவது மிருகத்தை அறுத்தல் அல்லது அறுத்த மாமிசத்தை விற்றல்அல்லது விற்பதற்கு வழங்குதல் குற்றமாகும்".
இந்த சட்டத்தில் “இறைச்சியை விற்கும்”(purpose of sale or sell or offer for sell )நோக்குடன் அறுத்தல் மாமிசத்தை விற்றல் அல்லது விற்பனைக்காக வழங்குதல் குற்றமாக இருக்கும் போது இனாமாக வழங்கும் அல்லாஹ்வின் கட்டளை (உழ்ஹியா) சட்டமுரணாகாது.எனவே எதிர்வரும் 14ம் திகதியும் அறுத்துடுவோம்.
குர்பான் கொடுப்பதற்கு முடிவு செய்தவர்கள் செய்ய வேண்டியவை
(1).குறிப்பிட்ட ஆட்டையோ மாட்டையோ விற்பவரிடமிருந்து இன்ன நபருக்கு இன்ன நிறையுடைய இன்ன நிறமுடைய மாட்டை அல்லது ஆட்டை இன்ன விலைக்கு விற்பதாக எழுத்து மூலமான ஆவணத்தை பெறவேண்டும். வடக்கு கிழக்கு மாவட்டங்களில் "மாட்டுத்துண்டு" எனும் பெயரில் கடைகளில் இதனை வாங்கி நிறப்பிக்கொள்ளலாம்.
(2).வாங்குபவரும் விற்பவரும் சேர்ந்து குறித்த மிருகமானது மனித நுகர்வுக்கு உகந்தது எனும் சான்றிதழை அந்த பகுதிக்கு பொறுப்பான பொதுச்சுகாதார உத்தியோகத்தரிடமிருந்து (PHO) பெறுதல் வேண்டும்.
(3).மிருகம் அறுக்கப்படும் இடம் மாநகரமாயின் மாநகர முதல்வரிடமிருந்தும் (Mayor),நகர சபை அல்லது பிரதேச சபையாயின் தவிசாளரிடமிருந்து (Chairman)அனுமதிப்பத்திரம் பெறவேண்டும்.இதற்கான கட்டணம் ௹ 200/= இடத்திற்கு இடம் வேறுபடலாம்.
இந்த அனுமதி பெறப்படாது அறுத்து பிடிபட்டால் ரூ.2000/- தொடக்கம் ரூ.20,000/-வரை தண்டப்பணம் விதிக்கக்கூடிய அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்குண்டு.
(4).எந்த இடத்தில் மிருகம் அறுக்கப்படுகிறதோ அந்த இடத்தில் அதனுடைய கழிவுகள் புதைக்கப்படக்கூடிய வசதி இருத்தல் வேண்டும்.அது பள்ளிக்குறிய காணியாக இருக்கலாம் அல்லது சொந்த காணியாகவிருக்கலாம். உள்ளூராட்சி சபைகளின் அனுமதி பத்திரத்தில் எமக்கு விரும்பிய இடத்தை குறிப்பிட முடியும்.
(5).இறைச்சியை வாகனங்களில் கொண்டு செல்லும் போது ஏனைய சமூகத்தினருக்கு காட்டாது மறைத்து செல்ல வேண்டும் என சில விதிகளை உள்ளூராட்சி சபைகள் ஆக்கலாம். ஆனால் குறித்த தினங்களில் மாடு ஆடு அறுக்க அனுமதி மறுக்கும் அதிகாரம் யாரிடமுமில்லை.
(6).அப்படி மறுக்கப்பட்டால் குறித்த அதிகாரிக்கு எதிராக அடிப்படை உரிமை (FR)வழக்கிடுவதற்கு இலங்கை வாழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையிருக்கிறது.
சட்டத்தரணி சறூக்-கொழும்பு