(ஆர்.விதுஷா)
அரசாங்க வைத்தியஅதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டிருந்த போதிலும் தமது வேலை நிறுத்த போராட்டம் வெற்றியளித்த்ததாக தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் தொடர்நது கூறியதாவது ,
எமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. 'தரம் குறைந்த மருந்து போதாதென்று தகுதியற்ற வைத்தியர்களும் 'என்ற தொனிப்பொருளிலேயே இந்த வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை எமது தனிப்பட்ட தேவைக்காக மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அப்பாவி மக்களின் நலனை கருத்தில் கொண்டே மேற்கொண்டிருந்தோம்.
எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சிலர் கூறிக்கொண்ட போதிலும் எமது தொழில்சங்க நடவடிக்கை வெற்றிகரமாகவே இடம் பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசாங்க வைத்திய சாலைகளினதும் வைத்தியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டனர்.
75 சத வீதமானோர் அதற்கான பங்களிப்பை அளித்திருந்தனர். மிகுதி 25 வீதமான வைத்தியர்கள் மக்களின் நலன் கருதி அவசர சேவைப் பிரிவில் பணியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
நாம் அரசியல் பின்னணியிலேயே இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார்.அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தரமற்ற மருந்துப்பொருட்களின் கொள்வனவு , மருந்து தட்டுப்பாடு மற்றும் மருத்துவக்கற்கைக்கான குறைந்தபட்ச தரத்தையேனும் நிர்ணயித்தல் போன்ற 8 கோரிக்ளைகளை முன்வைத்தே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தோம்.
இதில் எத்தகைய அரசியல் பின்னணியும் இல்லை. அரசாங்கத்திற்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளோம். அதற்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிடின் , மத்தியகுழு தீர்மானத்திற்கு அமைவாக தொழில் சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
மக்களின் நலன் கருதி, எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் வெற்றி .
Reviewed by Madawala News
on
August 24, 2019
Rating: