முஸ்லிம்களுக்கு எதிரான தன்னிச்சையான கைதுகளையும் பிற முறைகேடுகளையும் முடிவுக்குக் கொண்டுவர
வேண்டுமென, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்களை, நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் காணப்படும் அதேவேளை, பிரஜைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளதாக, மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியாவுக்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு, இலங்கை அதிகாரிகள் துரிதமாக முடிவை காணவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதினக் குண்டு வெடிப்புகளின் பின்னர், நூற்றுக்கும் மேற்பட்டவர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள், கண்மூடித்தனமாகக் கைதுசெய்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளனர் என்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமற்ற நிலையிலேயே, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேடுதல் நடவடிக்கையின் போது அல்-குர்ஆனை வைத்திருந்தமைக்காகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள மீனாட்சி கங்குலி, இலங்கையின் அனைத்துப் பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க, இலங்கை அரசாங்கம் உடனடியாகவும் பக்கச்சார்பற்ற விதத்திலும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் ஊடாகவே, மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும். அரசாங்கத்திடம் வேண்டுகோள்.
Reviewed by Madawala News
on
July 05, 2019
Rating: