இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபடுவதனை துஷ்பிரயோகமாகவே நோக்க முடிகிறது! -சம்பிக ரணவக்க
எம்.மனோசித்ரா
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த 254 பேருக்கும் கௌரமளிக்க வேண்டுமாயின் நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம், ஒரே நீதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் என்று பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒவ்வொரு மத நூல்களிலும் வெவ்வேறு விடயங்கள் கூறப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றில் ஏனைய மதங்களை தூற்றும் வகையிலும் எந்தக் கருத்துக்களும் கூறப்படவில்லை. நாம் ஒரு பொது சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே நாம் பின்பற்றும் விடயங்களை ஏனையோர் மீது திணிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நாட்டுக்கு பொது நீதியொன்று அவசியமாகின்றது.
அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் திருமணச் சட்டம் தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது. இஸ்லாம் மதத்தில் திருமண வயதெல்லை 12 ஆகக் காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் 16 வயதுக்கு உட்பட்ட பெண்பிள்ளைகள் திருமணம் செய்து அவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட்டால் அதனை துஷ்பிரயோகமாகவே நோக்க வேண்டியுள்ளது. எனவே தான் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அவர்களின் திருமண வயதெல்லையை 18 வயதாக நிர்ணயிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. எனவே நாம் அனைவரும் யாதார்த்தத்தை புரிந்து நடக்க வேண்டும்.
பொது நீதிக்கும், பொது சம்பிரதாயங்களுக்கும் உட்பட்டு வாழும் நிலைமை நாட்டுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு விடயங்கள் கூறப்பட்டிருக்கலாம். ஆனால் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்றார்.
இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபடுவதனை துஷ்பிரயோகமாகவே நோக்க முடிகிறது! -சம்பிக ரணவக்க
Reviewed by Madawala News
on
July 10, 2019
Rating: