பெண்களை பார்த்து விசிலடித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளுக்கு 6 மாத சிறை & 9,750 டொலர் தண்டப்பணம்.
பெண்களை பார்த்து விசிலடித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பொது இடங்களில் மேற்கொள்ளப்படும்
ஏனைய பாலியல் ரீதியான தொந்தரவு நடவடிக்கைகளை குற்றச்செயல்களாகக் கருதும் புதிய சட்டமொன்றை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிக்கோ டுதெர்ட் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
மேற்படி சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்படுபவர்கள் 6 மாதங்களுக்கு மேலான சிறைத்தண்டனை மற்றும் 500,000 பெஸோ (9,750 டொலர்) வரையான தண்டப் பண விதிப்பையும் எதிர்கொள்ள நேரிடும்.
இந்தச் சட்டம் தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி கடந்த ஏப்ரல் மாதம் கைச்சாத்திட்டிருந்த போதும் அது தொடர்பில் அதிகாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமையே அறிவிப்புச் செய்துள்ளனர்.
புதிய சட்டத்தின் பிரகாரம் வீதிகள், பணியிடங்கள். பொது வாகனங்கள் உள்ளடங்கலான பொது இடங்களில் பாலின அடிப்படையிலான பாலியல் தொந்தரவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் என்பன உள்ளடங்கலாக பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்தச் சட்டம் தொடர்பான எச்சரிக்கைகளைக் காட்சிப்படுத்தக் கோரப்பட்டுள்ளது.
எனினும் இந்தச் சட்டம் குறித்து பெண்கள் உரிமைகள் தொடர்பான அமைப்பொன்று கூறுகையில், ரொட்றிக்கோ டுதெர்ட் தானே அந்தச் சட்டத்தை மீறும் ஒருவராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ரொட்றிக்கோ டுதெர்ட் பொது இடத்தில் உரையாற்றுகையில், பெண்களை பாலியல் ரீதியில் அவதூறு செய்யும் விமர்சனங்களை வெளியிட்டு பல தட வைகள் சர்ச்சைக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களை பார்த்து விசிலடித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளுக்கு 6 மாத சிறை & 9,750 டொலர் தண்டப்பணம்.
Reviewed by Madawala News
on
July 17, 2019
Rating: