சஹ்ரான் இவ்வாறு மிலேச்சத்தனமான கொலைகாரணாக மாறுவார் என நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை
ஆர்.யசி
எமக்கும் சஹ்ரானுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தன. ஆனால் சஹ்ரான்
இவ்வாறு மிலேச்சத்தனமான கொலைகாரணாக மாறுவர் என நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. இவர் குறித்தும் முறைப்பாடுகளை நாம் செய்துள்ளோம். ஆனால் நாம் வாய்திறக்காது இருக்க காரணம் உள்ளது. எமக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது. இவர்களின் அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து தெரிவித்தும் எமக்கு எவரும் பாதுகாப்பு தரவில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார்.
எமக்கு எதிராகவும் எமது மதத்துக்கு எதிராகவும் மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து எம்மை நோகடித்து எமது மக்களை வேதனைபடுத்துகின்ற மோசமான செயற்பாடுகள் நிறுத்தப்படும் வரையில் எவ்வாறு நீங்கள் கூறும் முஸ்லிம் அடிப்படடைவாதம் முடிவுக்கு வரும்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவரசகால சட்டத்தை கையாளப்போகின்றீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு சாட்சியமளிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி நேற்று சாட்சியமளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட சஹாரான் அமைப்பினர் முதலில் என்னையே கொலைசெய்ய வேண்டும் என்ற பிரசாரத்தை செய்து வந்தனர். நான் ஒரு காபிர் என்றும் நான் முஸ்லிம் அல்லாதவன் என்றும் நான் ஞானசார தேரருடன் தொடர்பில் உள்ளேன் என்றும் கருத்துக்களை பரப்பினர். தவறான புகைப்படங்களை புனைந்து என்னை தவறாக சித்தரித்தனர். எனினும் இது குறித்து நாம் பல தடவைகள் பாதுகாப்பு தரப்புக்கு தெரிவித்துள்ளோம். அதுமட்டும் அல்ல சஹ்ரான் மற்றும் அவர் சார்ந்த குழுவின் செயற்பாடுகளை நாம் முஸ்லிம் செயற்பாடுகள் அல்ல என தெளிவாக கூறியுள்ளோம்.
தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பு என நாம் கூறியிருந்தோம். இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் அனைத்தையும் வரவழைத்து ஒரு அமைப்பாக ஒரு கொள்கையில் கீழ் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் வலியுறுத்தினோம். அதில் தவ்ஹித் ஜமா அத் அமைப்பு இணங்கவில்லை. இவர்களுடன் மொத்தம் 12 அமைப்புகள் இணைந்து செயற்பட்டன. இவர்கள் இந்தியாவின் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்புடன் இணைந்து செயற்பட்ட அமைப்பாகும்.
முஸ்லிம்கள் எவரும் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து செயற்படும் நபர்கள் அல்ல. நாம் ஒருபோதும் ஐ.எஸ். அமைப்பை ஆதரிக்கவில்லை. அவர்கள் எவரும் முஸ்லிம்கள் அல்ல. இலங்கையில் ஐ.எஸ் என கூறும் எவரும் இருப்பதாக நினைக்கவில்லை. இலங்கையில் இருந்து சிரியாவிற்கு சென்றதாக முப்பது, நாற்பது குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. அவர்கள மீண்டும் இலங்கைக்கு வந்ததாக கூறப்படுகின்றது. அவர்கள் தவிர்ந்து வேறு எவரும் இருப்பதாக தெரியவில்லை. எனினும் இவை அனைத்தையும் உரிய காரணத்துடன் தெரியப்படுத்தியுள்ளோம். இறுதியாக 2019- 01-03ஆம் திகதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்து இறுவெட்டுக்கள், அறிக்கைகள் என சஹ்ரான் குறித்து அனைத்தையும் வழங்கியுளேன்.
திகன தாக்குதலில் பின்னரே சஹ்ரான் தீவிர அடிப்படைவாதத்தை கையில் எடுத்துள்ளார் என்றே அறிய முடிகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்து கடவுள் சிலைகள் சிலவற்றை அவர்களின் பள்ளிவாசலில் வைத்து முஸ்லிம் மாணவர்களுக்கு ஏனைய மதங்கள் குறித்து கருத்துக்களை கூறியுள்ளனர். இவர்கள் எவரும் முஸ்லிம் கொள்கை இல்லாதவர்கள் என்ற அடிப்படைவாத கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. எமக்கும் சஹ்ரானுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தன. ஆனால் சஹ்ரான் இவ்வாறு மிலேச்சத்தனமான கொலைகாரணாக மாறுவார் என நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. அதேபோல் முஹம்மத் ரம்சி என்ற நபரும் எமது கொள்கைக்கு முரணான ஒருவர் தான். இவரும் இந்தியாவின் தவ்ஹித் ஜமா அத் அமைப்புடன் சார்ந்த கொள்கைக்கே பயணித்துள்ளார். இவர் குறித்தும் முறைப்பாடுகளை நாம் செய்துள்ளோம். ஆனால் நாம் வாய்திறக்காது இருக்க காரணம் உள்ளது. எமக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது. இவர்களின் அடிப்படிவாத செயற்பாடுகள் குறித்து தெரிவித்தும் எமக்கு எவரும் பாதுகாப்பு தரவில்லை. ஆகவே நாம் இது குறித்து கூறவேண்டியவற்றை கூறியுள்ளோம்.
எவ்வாறு இருப்பினும் நாம் இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் வாழவே முயற்சித்து வருகின்றோம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த நாட்டில் நாங்கள் தீர்விரவாதிகள் அல்ல, நாம் ஜிஹாத் குறித்து என்ன கருதுகிறோம், ஜிஹாத் ஒருபோதும் தலிபான், அல் கைதா கொள்கை அல்ல என்ற காரணிகளை தொடர்ச்சியாக கூறி வருகின்றோம். ஆனால் நீங்கள் (தெரிவுக்குழு உறுப்பினர்களை நோக்கி கூறியது )எங்களை தொடர்ந்தும் நோகடித்து கீழ்த்தரமாக நடத்தி வருகின்றீர்கள். எமது கொள்கை, எமது மதம் அவமதிக்கப்பட்டு வருகின்றது. நாம் அடிப்படைவாதிகள் என கூறி பெளத்த தேரர்கள் எமக்கு எதிராகவும் அரசியல் வாதிகள் எமக்கு எதிராகவும் செயற்படுவது எம்மை வேதனைப்படுத்திவருகின்றது.
ரமழான் மாதத்தில் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜிஹாத் புத்தகம் வைத்திருந்த குற்றத்தில் எமது முஸ்லிம் மக்கள் கைதுசெய்யப்படுகின்றனர். சுக்கான் சின்னம் பொறித்த உடை அணிந்த குற்றத்தில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். முகத்தை மூடி எச்சில் உமிழ முயன்ற பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு நீங்கள் நடந்துகொண்டால் எங்கே அடிப்படைவாதம் நிறுத்தப்படப்போகின்றது? முதலில் அரசாங்கம் உரிய சட்டங்களை சகலருக்கும் ஒரே மாதிரி பிரயோகிக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சகல சட்டத்தையும் ஆதரிக்க நாம் தயாராக உள்ளோம். இதனை நாம் வெளிப்படையாக தெரிவித்தும் விட்டோம். கடுமையான சட்டங்களை கொண்டு நாட்டினை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது.
நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விரைவில் எமது மக்கள் சுதந்தரமாக வாழ இடமளிக்க வேண்டும்,நான் ஒன்றை மட்டும் கேட்கின்றேன், இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவசரகால சட்டத்தில் கையாளப்போகின்றீர்கள். எமது மக்களின் பாதுகாப்பு எமக்கு முக்கியம். ஐ. எஸ் என்பது இஸ்லாம் அல்ல. அவர்கள் எவரும் முஸ்லிம்களும் அல்ல. இதனை நீங்கள் தான் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.
சஹ்ரான் இவ்வாறு மிலேச்சத்தனமான கொலைகாரணாக மாறுவார் என நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை
Reviewed by Madawala News
on
June 12, 2019
Rating: