சளைத்து விடாதீர், துயரம் கொள்ளாதீர், உண்மை விசுவாசிகளாக இருப்பின் நீங்கள் தான் உன்னதமானவர்கள் !


-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் -
அன்பிற்குரிய எனது உறவுகளே, இந்தப் புனித ரமழானில், எல்லா நிலையிலும், எங்கிருந்தாலும்
எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சி அவனது ஞாபகத்தை மனதில் இருத்தி அவனது கருணையை பாவமன்னிப்பை வேண்டி ஈருலக நன்மைகளையும் ஆசித்தவர்களாக வாழ அடியேனுக்கும் தங்களுக்கும் நினைவூட்டிக் கொண்டு;   

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழநிலையில் குறிப்பாக முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை எங்களனைவரையும் கவலை கொள்ளச் செய்தஇருக்கின்ற நிலைமையில் ஒருசில வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்!

“அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.” (ஸுரத் யூஸுப் 12:87)

இந்த இந்த சவால்களுக்குப் பின்னால் இருக்கின்ற சர்வதேச பிராந்திய பின்புலங்களையும், நிகழ்ச்சி நிரல்களையும் அவர்களது உள்நாட்டு முகவர்களையும் அவர்களது கூலிப்படைகளையும் எமது சமூகம் மாத்திரமல்ல முழு தேசமும் இன்று அறிந்திருக்கின்றனர், இது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான உலகளாவிய சமரின் ஒரு பகுதியே அன்றி வேறில்லை.


இந்த நிலையில் நாம் ஒருவருக்கு ஒருவர் சத்தியத்தை எடுத்துச் சொல்வதும் விளிப்பூட்டுவதும் பொறுமையாக நிதானமாக சத்திய வழி நடக்குமாறு பரஸ்பரம் உபதேசம் செய்து கொள்ளும் கூட்டுப் பொறுப்புடன் தலைமைத்துவக் கட்டுக் கோப்புடன் நடந்து கொள்ளவதன் மூலம் எமது ஒவ்வொரு நடவடிக்கையையும் இறைவனது திருப்தியை மாத்திரம் நோக்கமாக கொண்டு அல்லாஹ்வும் ரஸுலும் கட்டித் தந்துள்ள வழிமுறைகளை அறிந்து கடிப்பிடிக்க வேண்டும், இங்கு எமது ஆன்மீக படித் தரங்கள் சோதனைக்கு உள்ளாவதை நாம் ஒவ்வொரு கணமும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!

“ஷஹாதா” கலிமா சொன்ன ஒரே காரணத்தினால் ஒடுக்கப்படும் நாம் எல்லாம் வல்ல ஏகனாகிய அல்லாஹ்வின் மீது ஆழமான விசுவாசத்தயும் நம்பிக்கையையும் வைத்து எமது ஈமானை புதுப்பித்துக் கொள்ளவேண்டும், வானம் பூமி அனைத்தினதும் ஆட்சியாளன் அல்லாஹ்வின் வல்லமையில் அவனது கழா கத்ரில், விதிகளில், நியதிகளில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை வல்வூட்டிக் கொள்ள வேண்டும்!

சளைத்து விடாதீர், துயரம் கொள்ளாதீர், உண்மை விசுவாசிகளாக இருப்பின் நீங்கள் தான் உன்னதமானவர்கள் ! ஆல இம்ரான் : 139

எம்மை தற்பொழுது சுனாமி போல் சூழ்ந்துள்ள சவால்கள் அச்சுறுத்தல்கள் யாவும் நிச்சயமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப் படியே நடந்து கொண்டிருக்கின்றது என்பதனையும், இந்த சத்திய சோதனையில் ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் சோதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதனையும்  நாம் எல்லோரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

உலகெலாம் ஒன்று பட்டு ஒருவருக்கு ஒரு நன்மையையோ அல்லது தீமையையோ செய்ய விளைந்தாலும் அல்லாஹ் அதனை நாடி இருக்காவிட்டால் அவர்களால் அதனை செய்ய முடியாது என்று நாம் விசுவாசிக்கின்றோம், இங்குதான் எமது (ஒவ்வொருவரினதும்) ஈமானிய படித்தரங்கள ஆன்மீக நம்பிக்கைகள் சோதனைக்கு உள்ளாக்கப் படுகின்றன!

முன்னறிவிப்புச் செய்யப் பட்ட சோதனைகளுக்கே முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!


யுக முடிவு நெருங்கும் பொழுது முஸ்லிம் உம்மத்து உள்ளிருந்தும் புறமிருந்தும் எதிர்கொள்ள வேண்டியேற்படுமென முன்னறிவிப்புச் செய்யப்பட்ட சவால்களையே நாம் எதிர்கொள்கின்றோம் என்பதானால் நாம் நிலைகுலைந்துவிடாது மன உறுதியுடனும் இறையச்சத்துடனும் சத்திய வழி நடப்பதற்கு திட சங்கற்பம் பூண்டு கொள்ள வேண்டும்.

எமது தலைவர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) கூறினார்கள் “ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்கு போட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல், முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும்”.

அப்போது அங்கிருந்த ஒருவர், “(அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில்) அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா?” என்று கேட்க நபியவர்கள் சொன்னார்கள்: “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போல் உறுதியற்றவர்களாகவே இருப்பீர்கள். உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான்.

உங்கள் உள்ளங்களில் வஹ்ன் குடிகொண்டு விடும்.” என்று கூறினார்கள். வஹ்ன் என்றால் என்ன?” (அல்லாஹ்வின் தூதரே ) என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது” என்று பதிலளித்தார்கள்.   நூல்:- அபூதாவூத் 4297

வருகின்ற சோதனைகளின் பொழுது அவை எமக்கு தண்டனைகளாக அல்லாது எமது ஈருலக வாழ்விலும் சுபசோபனங்களை நன்மைகளை கொண்டுவந்து சேர்க்கக் கூடியவையாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி தவ்பாஹ் செய்து துஆ இறைஞ்சிக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்வும் மரணமும் ஒரு சத்திய சோதனைக் களமாகும்!

தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் எமக்கு சோதனைகள் வருவது இயல்பு, அவற்றிற்கு முறையாக முகம் கொடுப்பதே வாழ்க்கை, நாம் சோதிக்கப் படுவதற்காகவே படைக்கப் பட்டுள்ளோம்.


“எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன், உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.” (ஸுரத்துல் முல்க் 67:1,2)

எனவே சோதனைகள் வருகின்றபொழுது எம்மை ஆத்மார்த்தமாக நாம் சுய விசாரணை செய்துகொள்ள வேண்டும், அவை எமக்கு எமக்கு தண்டனைகளாகவும் இருக்கலாம், சமூகத்திற்கான சொதனைகலாகவும் இருக்கலாம்! எவ்வாறாக இருப்பினும் நாம் எலாம் வல்ல அல்லாஹ்விடமே மீள வேண்டும்!

“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன ‘அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)”  (ஸுரத்துல் பகரா 2:214)

நாங்கள் எதிர்கொள்ளும் சோதனைகளின் பொழுது காரண காரியங்களுக்கு அப்பால் நிச்சயமாக அவை அல்லாஹிவின் புறத்தில் இருந்து வருகின்றவை என்று     உளப்பூர்வமாக ஏற்று மனம் தளராது அச்சம் பீதி கொள்ளாது அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அவற்றிற்கு நாம் முகம் கொடுக்க வேண்டும்!

“நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங் கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர் களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக. அவர்கள் யாரெனில், தமக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்போது “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நாம் அவனிடமே திரும்பச் செல்பவர்கள் என்று கூறுவார்கள்.

அத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிட மிருந்து அருள்களும் கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.”  (ஸுரத்துல் பகரா 2: 155-157)

பலிகடாவாக்கப் படுவது முஸ்லிம்களாக இருப்பினும் இலக்கு வைக்கப் படுவது இந்த அழகிய தேசமாகும்.


நாங்கள் ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழுகின்றோம், அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் இந்த நாட்டில் இதுவரைகாலமும் ஏனைய சிறுபான்மை முஸ்லிம்கள் அனுபவிக்காத சமய கலாசார அரசியல் பொருளாதார சுதந்திரங்களை நாம் அனுபவித்து வருகின்றோம், பெரும்பானமையான பெரும்பான்மை சினைகள பௌத்த இந்து கிறிஸ்தவ மக்களுடன் சமாதன சகவாழ்வை பேணி வருகின்றோம்.

இது எமது நாடு என்ற தேசப்பற்றுடன் ஏனைய சமூகங்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாது இந்த நாட்டின் ஆள்புல ஒருமைப் பாட்டிற்கும், அமைதி சமாதானத்திற்கும், பொருளாதார சுபீட்சத்திற்கும் நாம் பங்களிப்புச் செய்து வருகின்றோம், அந்த வகையில்  இந்த நாட்டையும் மக்களையும் சர்வதேச, பிராந்திய சதிகாரர்களினது சதிவலைகளில் இருந்தும் சூழ்சிகளில் இருந்தும் அவர்களது முகவர்கள், கூலிப் படைகளின் கெடுபிடிகளில் இருந்தும் பாதுகாக்குமாறும் அறியாமையால் நெறி தவறுவோருக்கு நேரிய வழி வேண்டி பிரார்த்திக்கவும் வேண்டும்!

எல்லா நிலையிலும் எமது நம்பிக்கைக் கோட்பாடுகளை விசுவாசத்தை சன்மார்க்க தனித்துவங்களைப் பேணி முஸ்லிம் அல்லாத சமூகங்களுடன் நல்லுறவை பேணுவதும் மிகச் சிறிய தீய சக்திகளின் கெடுபிடிகளில் இருந்து அவர்களையும் காப்பற்றுவதற்கு மிகவும் தெளிவான நிலைப்பாடுகளை நாம் கொண்டிருத்தல் வேண்டும்.

எங்களை நாமே சுயவிசாரணை செய்து சோதனைகளில் இருந்து படிப்பினை பெறுதல்கலத்தல்!


கடந்தகாலங்களில் எமக்கு ஏற்பட்ட சோதனைகளில் இருந்து நாம் உரிய படிப்பினைகளை பெறவில்லை என்பதனாலும் நாம் மீண்டும் மீண்டும் சோதிக்கப் படுகின்றோம் என்று உளப்பூர்வமாக உணர்ந்து எங்களை நாங்களே அழமான சுய விசாரணைக்கு உற்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

எங்களது விருப்பு வெறுப்புக்கள், பந்த பாசங்கள், இலாப நஷ்டங்கள், ஆட்சி அதிகாரங்கள், பதவி அந்தஸ்துகள் என சகலவற்றிற்கும் அப்பால் எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும், தேசிய வாழ்விலும், ஒரு உலகளாவிய உம்மத்து என்ற வகையிலும் எம்மா நாம் ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும்!

எல்லாம் வல்ல அல்லாஹ் சொல்வதுபோல சோதனைகளின் பொழுது நல்லவர்களை தீயவர்களில் இருந்து பிரித்தறிய முடியுமான ஒரு சந்தர்ப்பம் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய சமூகங்களுக்கும் இப்பொழுது ஏற்பட்டுள்ளது, அத்தகைய சாதகாமான விடயங்களை கவனத்திற்கொண்டு எமது எதிர்கால நடவடிக்கைகளை கூட்டுப் பொறுப்புடனும் தலைமைத்துவக் கட்டுக் கோப்புடனும் மேற்கொள்ள நாம் தயாராக வேண்டும்!

“(நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உங்களையும் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வுலக அலங்காரத்தை நீங்கள் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உங்கள் கண்களைத் திருப்பி விடாதீர்கள். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீங்கள் கட்டுப்படாதீர்கள். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது. (அல்குர்ஆன் 18:28)

“அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.” (ஸுரத் யூஸுப் 12:87)

கூட்டுப் பொறுப்புடன் கூடிய தலைமைத்துவக் கட்டுக் கோப்பின் அவசியம்!


எமக்கு மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் வேற்றுமைகளுக்கு மத்தியிலும் சமூக தேசிய வாழ்வில் எம்மனைவருக்கும் பொதுவான விடயங்களில் நாம் ஒன்றுபட்டு இணக்கம் கண்டு செயற்படுவதற்குரிய தலைமைத்தோக் கட்டமைப்பை கட்டுக் கோப்பை ஊர்மட்டங்கள் முதல் தேசிய மட்டம் வரை நாங்கள் கொண்டிருத்தல் வேண்டும்.

இந்த நாட்டு முஸ்லிம்களில் 99 வீதமானவர்கள் நல்லவர்கள் அவர்கள் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அவற்றை ஆதரிப்பவர்களோ அல்லர்  என்ற மனப்பதிவை அண்மைக்காலமாக பெரும்பான்மை சமூகத்தினர் அதிகம் பேசுகின்றமை ஒரு சாதகமான சமிக்ஞையாகும், என்றாலும் நிலைகுலைந்து போயுள்ள தீய சக்திகள் அவர்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடடுப்பதில் விடாப்பிடியாக இருப்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத் தலைமைகளைப் பொறுத்தவரை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அவர்கள் இமாலய அமானிதத்தை சுமந்திருக்கின்றார்கள் என்பதனை நினைவில் கொண்டிருக்க வேண்டும், அது சையத் தலைமகளாக இருக்கலாம், சிவில் சமூகத் தலைமைகளாக இருக்கலாம் குறிப்பாக அரசியல தலைமைகளாகவும் இருக்கலாம்.


இந்தத் தலைமைகள் தமது கடந்த கால தவறுகளை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டும், பதவி அந்தஸ்த்து ஆட்சி அதிகாரம் செல்வம் செல்வாக்கு எனும் அற்ப இலாபங்களிற்காக தமக்குள் நிலவிய போட்டி பொறாமைகள், தம்மை நம்பியிருக்கும் சமூகத்தின் நலன்களில் நாம் கொண்டிருந்த கரிசனைகள், எமது சொந்த விருப்பு வெறுப்புக்கள்  இலாப நஷ்டங்களிற்காக நாம் மக்களது அபிமானத்தை நம்பிக்கை பொறுப்புக்களை துஷ்பிரயோகம் செய்தவை, கட்சி அரசியல் இயக்க வெறிகளுடன் நாம் ஏற்படுத்திய பிளவுகள், பிணக்குகள், சண்டை சச்சரவுகள் என எல்லாமே இன்று கொண்டு வந்து சேரத்துள்ள பின்விளைவுகள் குறித்து கைசேதப் பட்டு பிராயச்சித்தம் தேடுதல் வேண்டும்.

அவ்வாறு ஆத்மார்த்தமாக உணர்ந்து திருந்தி உடனடியாகவும் இனியுள்ள காலங்களிலும் இந்த சமூகத்தின் பாலும் தேசத்தின் பாலும் நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் சத்திய வழிநின்று எத்தகைய மூலோபாய நகர்வுகளுடன் எமது கடமைகளை பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதனை ஆழமாக சிந்தித்து செயற்பட முன்வரவேண்டும்.

இன்று இந்த சமூகம் வேண்டி நிற்பதெல்லாம் தமக்குரிய மிகத் தெளிவான ஆன்மீக அடித்தலங்களுடன் கூடிய வழிகாட்டல்களும் நெறிப் படுத்தல்களுமாகும், ஆன்மீக சன்மார்கத் தலைமகள் ஒரு புறமாகவும், சிவில் தலைமைகள் ஒருபுறமாகவும், இயக்கத் தலைமைகள் மறுபுறமாகவும், அரசியல் தலைமைகள் தத்தமது கட்சி அரசியல் வேண்டி நிற்கும் காய் நகர்த்தல்களிளுமாக காலத்தை கடத்திக் கொண்டு கலங்கிய குட்டையிலும் ஆட்சி அதிகாரம் ,செல்வம் செல்வாக்கு பதவி  அந்தஸ்து என்று அலைந்து திரிந்தால் கைசேதமே நாம் எல்லோருமே நஷ்டவளிகளாகி விடுவோம்!

“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.”

“பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்துக் கிளம்பி (பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் – அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.

(ஸுரத்துல் அன்பாஃல் 8:46,47)

சளைத்து விடாதீர், துயரம் கொள்ளாதீர், உண்மை விசுவாசிகளாக இருப்பின் நீங்கள் தான் உன்னதமானவர்கள் ! சளைத்து விடாதீர், துயரம் கொள்ளாதீர், உண்மை விசுவாசிகளாக இருப்பின் நீங்கள் தான் உன்னதமானவர்கள் ! Reviewed by Madawala News on May 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.