- RS Mahi - மாவனல்லை-
மாவனல்லை, தனாகம பிரதேசத்தில் இன்று (09.03.2019) சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத
நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாவனல்லை, தனாகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான மொஹமட் தஸ்லீம் என்பவரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் பிரதேசத்தில் சமூக, நல்லிணக்க, அரசியல் விடயங்களில் முன்னின்று செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.டி.டி. நிலங்க கருத்துத் தெரிவிக்கையில், “ அதிகாலை 4.45 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மொஹமட் தஸ்லீம் என்பவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இது தொடர்பில் மாவனல்லை குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி. மன்ஜுல தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மாவனல்லை பகுதியில் தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு..
Reviewed by Madawala News
on
March 09, 2019
Rating: