(ஹாசிப் யாஸீன்)
மூவின மக்களும் இன நல்லுறவைப்பேணி பிரச்சினைகளின்றி சகோதரத்துவத்துடன் வாழும்
இத்தறுணத்தில் அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இன ரீதியான பிரதேச செயலகம் ஒன்றை கோருவது அரசியல்வாதிகளின் அரசியல் சுயநலத்திற்காகவே அன்றி வேறில்லையென கல்முனை பொதுப்பணி மன்றம் தெரிவித்துள்ளது.
சமகாலத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகின்றமை தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன ரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மாற்றமானதாக காணப்படுகின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேச செயலகங்களின் கீழுள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு தனியான பிரதேச செயலகத்தை கோர முற்படுவது எவ்வாறு நியாயமற்றதாக காணப்படுமோ அதே போன்றதுதான் இக்கோரிக்கையும் என்பதை வீராப்பு பேசும் தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸிடம் கல்முனை தொடர்பான பிரச்சினையில் தலையிடுவதற்கு உரிமையில்லை எனக்கூறுவது வேடிக்கையாக இருப்தோடு தமிழ் அரசியல்வாதிகளின் மிலேச்சத்தனமான அதிகார வேட்கைப் போக்கையும் எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.
முஸ்லிம்களுக்கென்று இருக்கும் ஒரே ஒரு பழம்பெரும் நகரமான கல்முனையினை கபளீகரம் செய்வதற்கான முயற்சியினை தமிழ் அரசியல் தரப்பினர் மேற்கொள்கின்றனர். இது இப்பிரதேசத்தின் இன நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தி இப்பிரதேசம் கலவர பூமியாக மாறுவதற்கு வழி ஏற்படலாம்.
எனவே மக்கள் பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கண்டியெழுப்பக் கூடியவாறு செயற்படுதுடன் இன ரீதியான செயற்பாட்டினை கைவிட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் இன ரீதியான செயற்பாட்டினை கைவிட வேண்டும்.
Reviewed by Madawala News
on
March 13, 2019
Rating: