அல் இக்றா வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்ட மாணவர்கள் 18 தரம் 5 மாணவர்கள் வைத்தியசாலையில்..
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை அல் இக்றா வித்தியாலயத்தில்
ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்ட மாணவர்கள் 18 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கல்வி வவலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பூநொச்சிமுனை அல் –இக்றா வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மீது வகுப்பாசிரியர் மிகக் கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளார். குறித்த ஆசிரியர் கையினாலும் தடியினாலும் மிகவும் கடுமையாக தம்மை தாக்கியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்களின் உதவியுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆரம்ப கட்ட சிகிச்சைகளை மேற் கொண்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களை தாக்கிய குறித்த ஆசிரியரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆசிரியரின் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் ஏலவே கல்வித் திணைக்களத்தில் முறையிட்டிருந்ததுடன் இவரை இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் குறித்த ஆசிரியர் மாணவர்கள் மீது மிகவும் கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் இப்பாடசாலை அதிபர் ஏ.பி.அப்துர் ரசூல் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பாக தனக்கு கிடைத்த முறைப்பாட்டடையடுத்து மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்ற நடவடிக்கை எடுத்து வருவதுடன் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.
-Vidivelli
அல் இக்றா வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்ட மாணவர்கள் 18 தரம் 5 மாணவர்கள் வைத்தியசாலையில்..
Reviewed by Madawala News
on
March 14, 2019
Rating: