புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மக்கள் பாவனைக்காக திறந்து
வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை வெள்ளிக்கிழமை (22) புத்தளம் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.
புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.என். சித்ரானந்த தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கொழும்பிலிருந்து விஷேட ஹெலிகொப்டர் மூலம் புத்தளம் இராணுவ முகாம் மைதானத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி, புத்தளம் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வார்.
இதன்போது இளைஞர், யுவதிகள் மூலம் தொழில்வாய்ப்புக்களை பதிவு செய்யும் Smart Srilanka எனும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.
அத்துடன், புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடம் மற்றும் புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்னால் சகல வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் என்பனவற்றையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
அத்தோடு, புத்தளம் சேர்விஸ் வீதியில் உள்ள சக்தி விளையாட்டு மைதானத்தில் பிரதான வைபவம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, 1200 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களும் ஜனாதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்த வைபவத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், பாதுகாப்பு பிரிவினரின் பிரதானிகள், அரச திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இதேவேளை, நாளைய தினம் புத்தளத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் கறுப்பு கொடிகளுடன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கோரி புத்தளத்தில் நீண்ட காலமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடயத்தில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சர்வமத குழு மற்றும் க்ளீன் புத்தளம் அமைப்பினருக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதுவரை ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தே மக்கள் தினம் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளை புத்தள நகர மக்களே வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தது அறிந்ததே.
இந்நிலையில் புத்தளம் மக்களின் ஒருமித்த குரலினை செவிசாய்க்க மறுத்தமையை முன்னிட்டே இப்போராட்டம் ஏற்பாடாகியுள்ளது.
புத்தளத்தில் அபிவிருத்திகளை திறந்து வைக்க செல்லும் ஜனாதிபதிக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்பாட்டம்.
Reviewed by Madawala News
on
March 21, 2019
Rating: