பால்மாவில் கலப்பட விவகாரம்... நான் பொய் சொல்லவில்லை. அதிகாரிகள் சுகாதார அமைச்சரை ஏமாற்றியுள்ளனர்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு நான் பொறுப்பேற்க தயாராக இருக்கின் றேன்.
சுகாதார அமைச்சு அதிகாரிகள் சுகாதார அமைச்சரை ஏமாற்றி யுள்ளனர். அதனால் தெரிவுக்குழு அமைத்து உண்மையை கண்டறிய நட வடிக்கை எடுக்கவேண்டும் என கைத் தொழில் வாணிபத் துறை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலந்திருக்கும் விடயங்கள் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன். என்னால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தையும் எனது பிரதி அமைச்சுக்கும் நுகர்வோர் அதிகாரசபைக்கும் கிடைத்த முறைப்பாடுகளுக்கமையவே தெரிவித்திருந்தேன். அத்துடன் இந்த விடயங்களை சபையில் முன்வைப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அதுதொடர்பில் எனக்கு எழுத்து மூலம் அனுமதி வழங்கியிருந்தார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் பாராளுமன்றத்துக்கு என்னால் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நான் பொறுப்புடனே தெரிவித்தேன். மாறாக தன்னிச்சையாக எதனையும் தெரிவிக்கவில்லை. அதேபோன்று என்னுடைய உரையில் நான் எந்த நிறுவனத்தின் பெயரையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அன்றைய தினம் இது தொடர்பில் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும்போது பெயர்களை தெரிவித்திருக்கலாம்.
பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனமான பொன்டேரா நிறுவனம் முந்திக்கொண்டு இறக்குமதி செய்யும் பால்மாவில் எந்த கலப்படமும் இல்லை இன்று (நேற்று) ஊடகங்களில் அறிவித்தல் போட்டிருக்கின்றது.
அதேபோன்று மதுவரித்திணைக்கள முன்னாள் அதிகாரி ஒருவர் பொன்டேரா நிறுவனத்தில் இருந்துகொண்டு பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளை மிரட்டி வருகின்றார். விலை அதிகரிக்காவிட்டால் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
பால்மாவினால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் பால்மாவில் இந்த பிரச்சினையும் இல்லை என சுகாதார அமைச்சர் நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் அவருக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கைகளைவைத்துக்கொண்டுதான் இவ்வாறு தெரிவித்திருப்பார். ஆனால் நான் சபையில் பொய் சொல்லவில்லை. சுகாதார அதிகாரிகள் சுகாதார அமைச்சரை ஏமாற்றியுள்ளனர்.
எனவே இதுதொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் .
பால்மாவில் கலப்பட விவகாரம்... நான் பொய் சொல்லவில்லை. அதிகாரிகள் சுகாதார அமைச்சரை ஏமாற்றியுள்ளனர்.
Reviewed by Madawala News
on
February 09, 2019
Rating: