பாதாளக் குழு தலைவரான மாகந்துரே மதுஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட நடிகர்
ரயன் வேன் ரூயன் (Ryan Van Rooyen) பயன்படுத்திய கார் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் வெலிகம பொலிஸாரால் உடுபில பகுதியில் வைத்து கார் கைப்பற்றப்பட்டுள்ளது.
மதுஷூடன் கைது செய்யப்பட்ட ”சன்ஷைன் சுத்தா” என அழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவாவின் ஹோட்டலொன்றில் இருந்தே கார் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிறிதொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த குறித்த காரை, ரயன் பயன்படுத்தியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழுத்தலைவர் மாகந்துரே மதுஷுடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணுடையது என கூறப்படும் காரொன்றும் இன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாதுக்க – போரேகெதர, அரலிய மாவத்தையிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்த 54 மற்றும் 26 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகந்துரே மதுஷுடன் தொடர்புகளைப் பேணிய பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாய்க்கு சென்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மஹரகம பகுதியைச் சேர்ந்த அப்பெண், பாதாளக் குழுத் தலைவர்களில் ஒருவரான களு துஷாரவின் மனைவி எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துபாயிலுள்ள ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 சந்தேகநபர்களும் கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதித்த போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக துபாய் பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளதாக,
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
சந்தேகநபர்களை நாட்டிற்கு வரவழைப்பது தொடர்பில், இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுஷூடன் கைதான நடிகர் ரயன் பயன்படுத்திய கார் கேரள கஞ்சாவுடன் மீட்பு ..
Reviewed by Madawala News
on
February 09, 2019
Rating: