பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுடன் தற்போது டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள
பாதாள உலகக் குழு உறுப்பினரான கெசல்வத்தே தினுக என்பவரின் மாமாவான அல ரஞ்சி என்பவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது கைதுசெய்யப்பட்ட 57 வயதுடைய குறித்த நபரிடமிருந்து ஒரு தொகை ஹெரோயினும், இரண்டு அரிவாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக கப்பம் பெறும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம், பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கொள்ளையிடப்பட்ட 700 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் மற்றும் வைரம் என்பன டுபாயில் காவல்துறையினரின் பொறுப்பில் உள்ள பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுக்கு கிடைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மிரிஹான விசேட குற்ற வழிநடத்தல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கொள்ளைச் சம்பவமானது மாகந்துரே மதூஷினால் டுபாயில் இருந்தவாறு வழிநடத்தப்பட்டுள்ளதாக தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துபாயில் கைதான கெசல்வத்தே தினுகவின் மாமா 'அல ரஞ்சி' கெசல்வத்தேயில் கைது.
Reviewed by Madawala News
on
February 21, 2019
Rating: