புராதன தூபமொன்றின் மேல் ஏறிப் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேரையும் மன்னிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாக, ரஞ்சன் ராமநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று (03) கருத்துத் தெரிவித்த அவர், தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்கள், ஏற்கெனவே சில வாரங்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தமை மூலம் அவர்கள் பாடங்களைக் கற்றுள்ளனர் எனவும், அவர்களை மன்னிக்குமாறு கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதவுள்ளதாகத் தெரிவித்தார்.
சீகிரியச் சுவரில் எழுதிய போது, மாணவரொருவர் கைதுசெய்யப்பட்டமை, பிதுராங்கல குன்றில் அரை நிர்வாணப் புகைப்படங்களுக்குக் காட்சி கொடுத்தமைக்காக மூன்று இளைஞர் கைதுசெய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களின் போதும், ஜனாதிபதிக்குக் கடிதங்களைத் தான் அனுப்பியிருந்தமையும் ரஞ்சன் எம்.பி ஞாபகப்படுத்தினார்.
அநுராதபுர - திருகோணலைவீதியில், ஹொரொவ்பத்தானவில் அமைந்துள்ள கிரலகல தூபியின் மீது இம்மாணவர்கள் ஏறி நின்று புகைப்படமெடுத்திருந்ததோடு, கடந்த மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள 7 மாணவர்களையும் மன்னிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவேன் .
Reviewed by Madawala News
on
February 04, 2019
Rating: