தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள 18 வயதான சவூதிப் பெண்ணுக்கான அகதி அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ள
ஐக்கிய நாடுகள், அவருக்கான அகதி அந்தஸ்தை வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக நேற்று (09) கோரிக்கை விடுத்தது. இதன்மூலமாக, அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டிருக்கிறதெனக் கருதப்படுகிறது.
கடந்த வாயிறுதியில், தாய்லாந்தின் பாங்கொக்கை வந்தடைந்திருந்த றஹாஃப் மொஹமட் அல்-குனுன் என்ற அப்பெண், தனது குடும்பத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எனத் தெரிவித்திருந்தார். அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கு அகதி அந்தஸ்துக் கோரத் திட்டமிட்ட போதே, தாய்லாந்து அதிகாரிகளால் அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், றஹாஃபின் அகதி அந்தஸ்துக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், ஐ.நாவால் அகதி அந்தஸ்துக்காகப் பிரசீலிக்கப்பட்டால், றஹாஃபைக் குடியமர்த்துவது பற்றி ஆராயவுள்ளதாக, அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே, ஐ.நாவால், றஹாஃபின் அகதி அந்தஸ்துக் கோரிக்கை தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என, அவுஸ்திரேலிய உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்தது. எனவே, ஐ.நாவால் வழக்கமாக வழங்கப்படும் பரிந்துரைகளைப் போல, இப்பரிந்துரையையும் ஆராயவுள்ளதாக, அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டது.
குவைத்துக்குச் சென்றிருந்த போது, தனது குடும்பத்திடமிருந்து தப்பியோடியிருந்த இப்பெண், தனது குடும்பத்திடமிருந்து உடல், உள சித்திரவதைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுக்கு ஓடி தஞ்சம் அடைந்த சவூதிப்பெண் றஹாஃப் (18) இற்காக களம் இறங்கிய ஐக்கிய நாடுகள் சபை.
Reviewed by Madawala News
on
January 10, 2019
Rating: