வடக்கு, கிழக்கு இணைப்பு கிழக்குத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் தனித்துவத்தைப் பேணவும்
அத்தியாவசியமானது. வடக்கு, கிழக்கு இணையாவிட்டால் கிழக்கில் இன அழிப்புக்கு காலக்கிரமத்தில் இடம் உண்டு.
அழிக்கப்படும் இனம் பாரம்பரியமாக நூற்றாண்டுகள் காலம் அங்கு வாழ்ந்த தமிழ் இனமாகவே இருக்கும் என்று வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும் ஏக்கிய இராஜ்ய பதம் கொண்ட வடகிழக்கு இணைப்பற்ற சமஷ்டி அற்ற புதிய அரசியல் அமைப்பின் வரைவு பற்றி உங்கள் கருத்தென்ன என்று விக்கினேஸ்வரனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை அளித்துள்ளார்.
அந்த பதிலில் அவர் மேலும் தெரிவி்துள்ளதாவது
அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணம். ஆனால் இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் ஏதோ சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று ஜெனிவாவில் எடுத்துக் காட்டி அரசாங்கத்திற்கு மேலும் தவணை எடுக்க வேண்டியுள்ளது. எமது எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வது அவர்களின் நோக்கமல்ல. ஜெனிவா பிரச்சினையில் இருந்து தப்பி விடவேண்டும் என்பதே அவர்களின் அதியுச்ச அவாவாகும் ஆசையுமாகும். . தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் களைந்து அவர்களை நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நீரோட்டத்தினுள் அணைத்துச் செல்வது அரசாங்கத்தின் நோக்காக இருந்திருந்தால் தொடக்கத்திலேயே தமிழ் மக்கள் ஏன் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க முன் வருகின்றார்கள் இல்லை? ஏன் ஏக்கிய ராஜ்யவுக்கு அவர்கள் எதிர் ஏன் வடகிழக்கு இணைப்பைக் கேட்கின்றார்கள் ஏன் சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறுகின்றார்கள் என்பதை அலசி ஆராய்ந்திருப்பார்கள்.
அது அவர்களின் நோக்கமன்று. சிங்கள ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றி தமிழ் மக்களைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதே அவர்கள் குறிக்கோள். புதிய அரசியல் யாப்பு அதற்கான கண்துடைப்பு. அதில் தேர்தல் பற்றி வேறு விடயங்கள் பற்றி வருவது தமிழர்களுக்கு நாம் எதுவும் கொடுக்க இவ்வரைவைக் கொண்டு வரவில்லை என்று சிங்கள மக்களுக்கு கூறுவதற்காகவேயாகும்.
நாம் கேட்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்ற சிந்தனையுடனயே தமிழர்கள் சார்பில் எமது பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாறி உள்ளார்கள் என்பது போலத் தெரிகின்றது. அதாவது அரசாங்கம் இந்த அளவு தான் தர முடியும் என்று கூறியதை அதாவது பௌத்தத்திற்கு முதலிடம், ஒற்றையாட்சி, வடகிழக்கு இணைப்பில்லை, சமஷ்டி இல்லை என்பவற்றை வைத்து அவற்றை எப்படித் தமிழ் மக்களிடம் அவர்கள் முகம் சுழிக்காமல் கொண்டு செல்லலாம் என்று சிந்தித்தே நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார்கள் எங்கள் பிரதிநிதிகள் என்பது கண்கூடு. சுருக்கமாகக் கூறுவதானால் “தரமாட்டோம்” என்றவர்களிடம் “நீங்கள் தருவதைத் தாருங்கள்; நாங்கள் அதை எமது மக்களிடம் விற்கின்றோம்” என்று கூறியே இந்த வரைவைப் பெற்றுள்ளார்கள் எம்மவர்கள் போலத் தெரிகின்றது.
ஏக்கிய இராஜ்ய என்றால் ஒற்றை நாடு. ஏக்கிய இரஜய என்பது ஒற்றையாட்சி. சிங்களத்தில் இராஜ்ய என்பது நாடு என்று தமிழில் பொருள்படும். இரஜய என்பது ஆட்சி என்று தமிழில் பொருள்படும். ஆகவே ஏக்கிய இராஜ்ஜிய என்பது ஒற்றை நாடே ஒளிய ஒருமித்த நாடல்ல. ஆனால் ஒற்றை நாட்டை ஒருமித்த நாடு என்று குறிப்பிட்டு எங்கள் மக்கள் பிரதிநிதிகள் குழப்பத்தை விளைவித்து வருகின்றார்கள். அதாவது “ஒற்றை” யை “ஒருமித்த” என்ற விதத்தில் எமக்கு விற்கப் பார்க்கின்றார்கள்!
ஆனால் “ஒருமித்த நாடு” என்று கூறும் போது பிரிந்திருக்கும் அலகுகளை ஒன்றுபடுத்திய நாடு என்று பொருள்படும். அவ்வாறு ஒன்றுபடுத்தியதை சிங்களத்தில் “எக்சத் இராஜ்ஜிய” என்பார்கள். “ஏக்கிய இராஜ்ஜிய” என்று கூறமாட்டார்கள்.
நீங்கள் கூறும் விடயங்கள் பற்றி எம்மவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்று தெரிகின்றது. அதனால் அரசாங்கத்திற்கு சில விடயங்களைத் தெரியப்படுத்தவில்லை போல்த் தெரிகின்றது.
எவை எவை எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் இருப்பது தான் அதற்கழகு. நாம் வழி பிறழ்ந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெருநஷ்டம் ஏற்படும் என்பதற்கு பண்டாவும் பௌத்த பிக்குகளும் உதாரணம்.
இதை ஏன் சொல்கின்றேன் என்றால் நாங்கள் பௌத்தத்திற்கு முதலிடத்தை அரசியல் யாப்பில் இடப் போய் புத்த பிக்குகள் இலங்கை பூராகவும் “இது பௌத்த நாடு நாங்கள் எங்கு வேண்டுமானாலும் புத்த விகாரைகளைக் கட்டலாம்; புத்தர் சிலைகளை அமைக்கலாம்” என்று கூறி வடகிழக்கு மாகாணங்களில் தற்போது அலைந்து திரிகின்றார்கள். அவர்கள் பௌத்தத்தின் மேல் உள்ள அன்பில் மதிப்பில் இதைச் செய்யவில்லை. சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த இவ்வாறு நடக்கின்றார்கள். உள்ளூர் அதிகாரசபைகளின் அனுமதி பெறாமலேயே அவ்வாறு கட்டவும் அமைக்கவுந் துணிந்து விட்டார்கள். ஆகவே “இருந்து விட்டுப் போகட்டுமே” என்று கூறுபவர்கள் வட கிழக்கு மாகாணங்கள் பூராகவும் பௌத்த சின்னங்களையும் புத்த விகாரைகளையும் காலக்கிரமத்தில் எதிர்பார்க்க வேண்டும். அத்துடன் அது நின்றுவிடாது. விகாரையைச் சுற்றி முதலில் பிக்குமார், அதன்பின் அவர்களின் “தாயக்கர்கள்” அல்லது புரவலர்கள் வீடுகள் அமைப்பார்கள். குடியிருக்க வருவார்கள். வடகிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் பிரசன்னம் கூடும். எமது தனித்துவம் பறிபோய்விடும்.
வடகிழக்கு இணைப்பை ஏன் நாங்கள் கோருகின்றோம் என்பதை எம்மவர்கள் அரசாங்கத்திற்குச் சரியாகப் புரிய வைத்தார்களோ தெரியாது. வடக்கும் கிழக்கும் இப்பொழுது கூட பெரும்பான்மையாக தமிழ்ப் பேசும் பிரதேசங்களே. . வவுனியாவில் உள்ள எமது சகோதர இனம் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் தமிழ் மொழியுடனும் தமிழர்களுடனும் தமிழ் கலாசாரத்துடனும் தொடர்புபட்டவர்கள். ஆனால் அண்மைக் காலங்களில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் குடியேற்றப்பட்டவர்கள் அப்படியில்லை.
துவேஷம் மிக்கவர்கள். தெற்கில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். பலர் குற்றவாளிகளாக நீதி மன்றங்களினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் காணப்பட்டவர்கள் ஆகவே வட கிழக்கு பிரிக்கப்பட்டால் சிங்கள ஆதிக்கம் பெருகும். வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழர்கள் கையில் இருந்து பறிபோய்விடும்.
1881ம் ஆண்டில் தமிழர்கள் 60 சதவிகிதமும் முஸ்லீம்கள் 35 சதவிகிதமும் சிங்களவர்கள் 5 சதவிகிதமும் கிழக்கில் இருந்தார்கள். 1946ல் முஸ்லீம் மக்கள் 35ல் இருந்து 39 சதவிகிதத்துக்குப் பெருகினார்கள். தமிழர்கள் 60 சதவிகிதத்தில் இருந்து 54 சதவிகிதத்துக்குக் குறைந்தார்கள். சிங்களவர்களில் மாற்றம் இருக்கவில்லை. 5 சதவிகிதமாகவே இருந்தார்கள். முஸ்லீம் மக்களின் பெருக்கம் வழக்கமாகவே மற்றைய இனங்களிலும் பார்க்கக் கூடியதென்பதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். பல் தார மணங்கள் அம்மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் 1946 தொடக்கம் சிங்கள மக்களின் தொகை மிக விரைவாகப் பெருகத் தொடங்கியது. 1981ல் தமிழர்களின் ஜனத்தொகை 42 சதவீதமாகக் குறைந்தது. முஸ்லீம்களின் ஜனத்தொகை 32 சதவீதமாகக் குறைந்தது. சிங்களவரின் ஜனத்தொகை 5 சதவிகிதத்தில் இருந்து 25 சத விகிதத்திற்குப் பெருகியது. இதேவாறு பெருக்கம் நிலைத்திருந்தால் 2031ல் சிங்களவர்கள் ஜனத்தொகை 50 சதவிகிதமாக ஏறியிருக்கும்.
போர் வந்ததால் அவர்கள் ஜனத் தொகை குறைந்தது. முஸ்லிம்கள் தொகை 35 சதவிகிதத்திலேயே நின்றது. ஆனால் தமிழரின் ஜனத் தொகை வருடா வருடம் குறைந்து கொண்டு போகின்றது. ஆகவே வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக அவசியம் ஆகின்றது. இல்லையேல் அவர்களின் மொழி, காணிகள், அவர்களின் அடையாளங்கள், பாரம்பரியங்கள் எல்லாமே அழிந்து விடுவன.
வடகிழக்கு இணைப்பு கிழக்குத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் தனித்துவத்தைப் பேணவும் அத்தியாவசியமானது. வடகிழக்கு இணையாவிட்டால் கிழக்கில் இன அழிப்புக்கு காலக்கிரமத்தில் இடம் உண்டு. அழிக்கப்படும் இனம் பாரம்பரியமாக நூற்றாண்டுகள் காலம் அங்கு வாழ்ந்த தமிழ் இனமாகவே இருக்கும்.
மூன்றாவது சமஷ்டியின் அவசியம் பற்றியதாகும். இறைமை பகிரப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட்டு பாராளுமன்றத்திற்கு இணையான சட்டவாக்க அதிகாரத்தைப் பிராந்தியம் பெற்று, பகிரப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற முடியாதபடி ஏற்பாடுகள் உள்ளடக்கப்படட போது தான் அங்கு சமஷ்டி உருவாகின்றது. புதிய அரசியலமைப்பு வரைவு முழுமையான சமஷ்டி ஆட்சி முறைமையின் அம்சங்களைக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. 2000ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசிலமைப்பு வரைவில் அரசானது மத்தியையும் பிராந்தியங்களையும் கொண்டதாக அமையும் என்று கூறப்பட்டது.
தற்போதைய வரைவில் இலங்கை அதன் அரசியல் அமைப்பில் உள்ள தத்துவங்களைப் பிரயோகிக்கின்ற மத்திய மற்றும் மாகாணங்களைக் கொண்டிருக்கும் எனப்படுகிறது. இதில் மாகாண அரசாங்கம் எந்தளவிற்கு குறித்த தத்துவங்களை பிரயோகிக்க முடியும் என்பது கேள்விக் குறியாகி இருக்கின்றது.
புதிய அரசியலமைப்பு வரைவில் தடுமாற்றந் தருஞ் சொற்பிரயோகங்கள் பெரும்பான்மை மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் நீதித்துறையினருக்கு பக்கச் சார்பான தீர்மானங்களை வழங்க இடமளிக்கும். நாங்கள் சிங்களவருக்கு ஒரு முகம் தமிழர்களுக்கு இன்னொரு முகம் காட்ட முற்பட்டாலும் இந்த வரைவினால் வரும் பிரச்சினைகளை பெரும்பான்மையின நீதியரசர்களே தீர்க்கப் போகின்றார்கள். அவர்கள் “ஏகிய இராஜ்ய” என்பது ஒற்றையாட்சியே என்று தான் கருத்துக்கொள்வர். எமது தமிழ் அரசியல்வாதிகளின் “ஒருமித்த நாடு” என்ற கருத்தை ஏற்று கொள்ளமாட்டார்கள். ஆகவே பிறரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாமல் எம்மை நாமே ஆள சமஷ்டி முறை தான் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இதுவே தந்தை செல்வாவின் விருப்பமும். சமஷ்டி எவ்வாறு சிங்கள மக்களுக்குப் பாதகம் விளைவிக்கும் என்பதைச் சிங்கள அறிவியலாளர்கள் எமக்குக் கூற வேண்டும். அவற்றிற்கான தக்க பதிலை நாம் தருவோம். உண்மையில் சமஷ்டியானது வெவ்வேறு மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்.
எது எவ்வாறெனினும் குறித்த வரைவு கூட தற்போது அலமாரியில் வைத்துப் பூட்டியாகிவிட்டது என்றே கொள்ள வேண்டியுள்ளது. நெருக்குதல் இல்லாமல் பெரும்பான்மை சிங்கள அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதுவுமே தர மாட்டார்கள் என்பது கண்கூடு. பிரதமர் இரணில் அவர்கள் அதனை அண்மையில் தெட்டத் தெளிவாக நிரூபித்து விட்டார்.
மனோ கணேசன் கூறியது போல் சிங்களத் தலைவர்களைத் தமது முன்மொழிவுகளைத் தருமாறு கூறிவிட்டு யாப்பைத் தயாரிக்க நாம் உதவியதை விட்டு விட்டு நாம் வேறு விடயங்களிலேனும் வெற்றி கண்டிருக்கலாம். பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் அரசியல் கைதிகள் விடுதலை பொது மக்கள் காணிகள் விடுவிப்பு படையினரை வடக்கில் இருந்து நீக்குதல் என்று எத்தனையோ விடயங்களை ரணிலுக்கு உதவி தருவதற்கு முன் நிபந்தனையாக இட்டு சாதித்திருக்கலாம். இப்பொழுது யானைக்கு அடிசறுக்கியுள்ளது. அகங்காரத்திற்கு அடி கொடுக்கப்பட்டுள்ளது. சாணக்கியம் சறுக்கிப் போயுள்ளது.
வடக்கு, கிழக்கு இணையாவிட்டால் கிழக்கில் இன அழிப்புக்கு இடமுண்டு.
Reviewed by Madawala News
on
January 22, 2019
Rating: