புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்க இந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் ஆணை
இல்லாதுள்ளதால் இப்போதுள்ள நிலைமையில் புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லை என இலங்கையின் பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் தெரிவித்துள்ளன.
புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து மல்வத்து அனுநாயக தேரரான நியன்கொட விஜித தேரர் கருத்து கூறுகையில்,
”இப்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னெடுத்துள்ள முயற்சிகள் அவசியமற்ற ஒன்றாகும். ஒரு சிலரை மாத்திரம் இலக்கு வைத்து அவர்களின் தேவை கருதிய அரசியலமைப்பொன்று உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அரசாங்கம் அரசியலமைப்பு முயற்சிகளை எடுத்ததாக கூறுகின்ற போதிலும் அதனை உருவாக்க மக்கள் ஆணை ஒன்று இல்லை. அவ்வாறிருக்கையில் இந்த முயற்சிகளை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் எதிர்க்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடாது. அரசாங்கம் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்,
இது குறித்து அஸ்கிரிய பீட அனுநாயகர் ஆனமடுவே தம்மதாச தேரர் கூறுகையில்,
பாராளுமன்றத்திற்கு தொடர்பே இல்லாத நிபுணர் குழு தமக்கான அரசியலமைப்பு கோரிக்கை ஒன்றினை முன்வைத்து அவர்களின் கருத்துக்களை உருவாக்கியுள்ளனர். என்னவாக இருந்தாலும் புதிய அரசியலமைப்பொன்று அவசியம் இல்லை என்பதே எமது ஒரே நிலைப்பாடு. ஆரம்பத்தில் இருந்தே இதனை நாம் முன்வைத்து வருகின்றோம். வேண்டுமென்றால் இப்போதுள்ள தேர்தல் முறைமையில் ஏதேனும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றம் ஒன்றினைச் செய்யுங்கள் என்பதையே நாம் தெரிவித்தோம். பழைய முறைமையையும் புதிய முறைமையையும் கையாளக்கூடிய ஏதேனும் தேர்தல் முறைமை மாற்றமொன்றினைச் செய்யுங்கள் என அரசாங்கத்திற்கு தெரிவித்தோம். மக்களின் ஆணை இல்லை, பெளத்த பீடங்களின் அனுமதி இல்லை, அப்படியென்றால் யாருடைய தேவைக்காக இந்த அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. முதலில் அரசாங்கம் மக்களின் கருத்துக்கு செவிமடுக்க வேண்டும். மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற மக்கள் கருத்து உள்ளது. அதற்கமைய அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறான அவசியமற்ற காரணிகளை கொண்டு காலத்தை கடத்தி மக்களின் எதிர்ப்பினை சம்பாதிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli
நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையற்றது ; அஸ்கிரிய -மல்வத்து பீடங்கள்
Reviewed by Madawala News
on
January 14, 2019
Rating: