இராணுவ முகாம் அகற்றப்பட்டதையடுத்து 12 வருடங்களின் பின் காணிகளை துப்பரவு செய்த தோப்பூர் கல்லாம்பத்தை கிராம மக்கள்.
-தோப்பூர் எம்.என்.எம்.புஹாரி-
திருகோணமலை தோப்பூர் கல்லாம்பத்தை 10 வீட்டுத் திட்ட இரானுவ முகாம் அகற்றப்பட்டதையடுத்து குறித்த
வீட்டு உரிமையாளர்கள் புதன்கிழமை (09) தமது காணிகளை சென்று பார்வையிட்டதோடு, துப்பரவு பணியிலும் ஈடுபட்டனர்.
1980 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஆர்.பிரேமதாஸா வீடமைப்பு அமைச்சராக இருந்த போது தோப்பூரைச் சேர்ந்த 10 குடும்பங்களுக்கு தோப்பூர் கல்லாம்பத்தை கிராமத்தில் இந்த வீடுகள் வழங்கப்பட்டிருந்தன.
இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போது அவர்களால் அங்கு குடியிருக்க முடியாமல் போக கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த 10 வீடுகளும் அதன் காணிகளையும் இரானுவம் கையகப்படுத்தி இரானுவ முகாம் அமைத்திருந்தனர்.இந் நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரையின் அடிப்படையில் பொது மக்களின் காணிகளில் படை முகாம் இருந்தால் டிசம்பர் மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டுமென்றை கோரிக்கைக்கு இணங்க கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி கிழக்கு மாகாண இரானுவ கட்டளைத் தளபதியினால் இந்த காணி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரானுவ முகாமினை அகற்றும் பணியில் இரானுவத்தினர் ஈடுபட்டு அவர்களின் வேலைகள் முடிவடைந்த நிலையில் , நேற்றைய தினமே காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை துப்பரவு செய்ய அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது தமது காணிகளை விடுவிக்க உதவிய ஜனாதிபதிக்கும் ,இரானுவத்தினருக்கும் கல்லாம்பத்தை கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்ததோடு, சேதமடைந்திருக்கும் வீடுகளை புனரமைத்துத் தரவும், மின்சாரம் ,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொண்டு தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இராணுவ முகாம் அகற்றப்பட்டதையடுத்து 12 வருடங்களின் பின் காணிகளை துப்பரவு செய்த தோப்பூர் கல்லாம்பத்தை கிராம மக்கள்.
Reviewed by Madawala News
on
January 10, 2019
Rating: