உலகப் புகழ்பெற்ற பறவையியல் வல்லுநர் சலீம் அப்துல் அலி அவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2.0


(நன்றி : விகடன் )
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2.O திரைப்படத்தின் கதை உலகப் புகழ்பெற்ற
இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் ஆராய்ச்சியாளர் சலீம் மொய்ஜூதீன் அப்துல் அலி அவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரது காதாப்பாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

1896 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார். தன் பள்ளிப் பருவத்திலிருந்தே சலீம் அலி ஒரு வேட்டை பிரியர். பறவைகள் மீது சலீம் அலியின் ஆர்வம் திரும்பியதற்கு, அவரது இளமையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியே காரணம். இளம் வயதில் அவர் ஒரு சின்னஞ்சிறு சிட்டுக் குருவியை சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சிற்றப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது. அப்பொழுதிலிருந்து சலீம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் தமையனுக்கு தொழிலில் உதவுவதற்காக இடையில் பர்மாசென்றுவிட்டார். அங்குச் சென்றும் தமையனுக்கு உதவுவதைவிடப் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் 1920இல்மீண்டும் சலீம் அலி பம்பாய் திரும்பினார்.

பர்மாவிலிருந்து திரும்பியவுடன் சலீம் அலிக்கு விலங்கியல் துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்வி பெற்றதன் காரணமாக பம்பாய் தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில், அவருக்கு வழிகாட்டி வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சலீம் அலிக்கு இவ்வேலை மென்மேலும் அத்துறையில் ஆர்வத்தை ஊட்டியது. பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சலீம் அலி ஜெர்மனிசென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் (Dr Irwin Strassman) என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து இந்தியா திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சலீம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கனவே பார்த்துவந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை.

சலீம் அலி தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்; அங்கிருந்த தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சலீம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது.

சலீம் அலி பறவைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பறவைகளைப் பற்றியும் அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்து பின்னரே தகுதியான முடிவுக்கு வருவது சலீம் அலியின் வழக்கம். இத்தகைய சிறந்த ஆய்வு முறைகளை மேற்கொண்டு சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கைநூல் (The HandBook on Indian Birds)” என்பதனை இயற்றி வெளியிட்டார். இந்தியப் பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத நூல் இது. இந்நூல் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

சலீம் அலியின் உலகமே இந்திய நாட்டுப் பறவைகளோடு பின்னிப் பிணைந்ததாக விளங்கியது. இந்நிலையில் அவர் உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே (S.Dillon Ripley) என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அப்போது இந்தியத் துணைக்கண்டத்துப் பறவைகளைப்பற்றி 10 தொகுதிகளைக்கொண்ட தொகுப்பு நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இத்தொகுப்பில் பறவைகளைப் பற்றிய பல்வேறு விவரங்களும், அதாவது அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கவழக்கம், இனப்பெருக்க முறை, வலசை போதல் போன்ற பல்வேறு செய்திகளும் அடங்கியிருந்தன. பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமன்றி, வாழ்க்கைப் பணியாகவே சலீம் அலி மேற்கொண்டிருந்தார். மக்கள் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலீம் அலிக்கு அப்பட்டம் மிகவும் பொருத்தமே.

பத்ம பூஷண் (1958), பிரித்தானியப் பறவையியல் கழகத்தின் விருது (1967), ஜோன் சி. பிலிப்ஸ் விருது (World Conservation Union – 1969), பத்ம விபூஷண் (1976), J. Paul Getty Wildlife Conservation Prize of the World Wildlife Fund (1976), Commander of the Netherlands (Order of the Golden Ark) (1986) ஆகிய விருதுகள் சலீம் அலியை தேடி வந்தன.

சலீம் அலி 1987 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாள் புற்றுநோயால் மரணமடைந்தார்.
நன்றி : விகடன் )
உலகப் புகழ்பெற்ற பறவையியல் வல்லுநர் சலீம் அப்துல் அலி அவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2.0 உலகப் புகழ்பெற்ற பறவையியல் வல்லுநர் சலீம் அப்துல் அலி அவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2.0 Reviewed by Madawala News on December 02, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.