இரண்டாவது நாளாகவும் பெரும்பான்மையை காட்டமுடியாமல் வெளியேறிய மகிந்த வெட்கமிருந்தால் கேட்டுப் பதவி விலகவேண்டும். சண்டியர்களை கொண்டுவந்து பாராளுமன்றை கைப்பற்ற முடியாது. ஒருவர் பின் ஒருவர் மரணித்தாலும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை கைவிடப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான குறிப்பிட்டார்.
சூதாடும் ஒருவரை ஜனாதிபதியாக்கியதை நினைத்து வெட்கப்படுகின்றோம். சீட்டாட்டத்தில் தற்போது அவர் ஜோக்கர்களை மாத்திரமே கையில் வைத்துக்கொண்டுள்ளார். எமக்கு எதிரான துரும்புகளை தன்னிடம் வைத்திருப்பதாக கூறிய ஜனாதிபதிக்கு, பாராளுமன்றிலும், நீதிமன்றிலும், மக்கள் முன்னிலையும் எமது துரும்பை காட்டியுள்ளோம் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றிலும், பாராளுமன்றிலும் கிடைக்கப்பெற்ற ஜனநாயக வெற்றியை கொண்டாடும் வகையில் கொழும்பு, லிப்டன் சுற்றுவட்டத்தில், ஐக்கிய தேசிய முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெற்றிக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சட்டவிரோதமான ஆட்சியமைத்தால் நாம் விட்டுக்கொடுத்து விடுவோமென தப்புக்கணக்கு போட்டுவிட்டார். 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே ஜனாதிபதியை பதவியேற்றியது. அவர் பின்கதவினால் மகிந்தவை ஆட்சிக்கு கொண்டு வந்ததும் நாம் பயந்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவோம் என நினைத்துவிட்டனர்.
ஜனநாயகத்தை விட்டுக்கொடுக்க நாம் மடையர்கள் அல்ல. ஜனாதிபதியுடன் நீண்ட பயணம் செல்லவிருந்தோம். ஆனால் அதற்கு தற்போது சாத்தியமில்லை. சண்டித்தனத்தை கண்டு ஓடி ஒளியப் போவதில்லை. உயிர்த்தியாகம் செய்தாயினும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம். இரண்டாவது நாளாகவும் பெரும்பான்மையை காட்டமுடியாமல் வெளியேறிய மகிந்த வெட்கமிருந்தால் கேட்டு பதவி விலகவேண்டும். சண்டியர்களை கொண்டுவந்து பாராளுமன்றை கைப்பற்ற முடியாது. உங்கள் சண்டித்தனத்தினால் ஒருவர் பின் ஒருவர் மரணித்தாலும் ஜனநாயகத்தை விட்டுக்கொடுக்க போவதில்லை என்றார்.
-Vidivelli