குறுகிய அரசியல் நோக்கத்திற்காக நாட்டின் யாப்புக்கு மதிப்பளிக்காது, ஜனநாயகத்திற்கு இடமளிக்காது,
பாராளுமன்றத்தைக் கூட்டும்படி பெரும்பான்மையான உறுப்பினர்களால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு செவிமடுக்காமை போன்ற விடயங்களை நான் நேர்மையானவையாகக் காண்பதில்லையென தேசிய ஊடக மத்திய நிலைய தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் தொடர்ந்தும் கூறியதாவது;
ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோரிடம் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்படியும், அரசியல் யாப்பை மதிக்காது நாட்டைத் தவறாக வழிநடத்தி காட்டுமிராண்டி யுகத்துக்கு நாட்டைத் தள்ளவேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
தேசிய ஊடக மத்திய நிலையத்திற்கு சேறு பூசும் வகையிலான அபாண்டப் பழிகளைச் சுமத்தி பிரசாரங்களை மேற்கொள்வதன் மூலம் இங்கு பணியாற்றும் சகல ஊழியர்களினதும் எதிர்கால நலன்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தைக் கூட்டும்படி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை இழுத்தடிப்புச் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தை அகௌரவப்படுத்துவது நல்லதல்ல. இவர்கள் குறிப்பிடுவது போன்று எத்தகைய முறைகேடுகளும் அங்கு நிகழவில்லை. இதனை என்னால் உறுதிபடக்கூற முடியும். அவ்வாறுள்ளதெனின் தக்க ஆதாரங்களை முன்வைக்கலாம். எந்த பரிசீலனைக்கும் நாம் முன்வரத் தயாராவே உள்ளோம். எந்த நீதிமன்றத்திலும் முகம் கொடுக்கவும் பின்வாங்க மாட்டோம். எனவே, சரியான முறையில் காரணிகளைக் கண்டறியாது நாட்டின் சம்பிரதாய அரசியலில் இடம்பெற்ற நிகழ்வுகளை முன்வைத்து விரும்பத்தகாத விடயங்களை எழுப்பிக் கொண்டிருப்பது முறையல்ல.
உலகில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளான ஜப்பான், இந்தியா, சவூதி அரேபியா மற்றும் மேற்குலக நாடுகளில் ஊடகங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அங்கெல்லாம் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
அதேபோன்றே இங்கு நிருவாக சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக தர்மசிறி ஏக்கநாயக்க கடமையாற்றுகிறார். பிரதமரின் பிரதிநிதியாக சமன் அதாவுட செய்திப் பணிப்பாளராகவும் மற்றும் மேலும் மூன்று பணிப்பாளர்களும் கடமையில் உள்ளனர். அத்துடன் இலத்திரனியல் ஊடகப் பிரிவில் மஹிந்த ரூபசிங்கவும் அச்சு ஊடகப் பிரிவில் சிசில் விஜேரத்ன, சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி ஆகியோருடன் 30 பேர் செயற்பாட்டு சபையில் உள்ளனர். மேற்படி சேறுபூசும் நடவடிக்கையால் மேற்கண்ட அதிகாரிகளின் பணிகளும் கொச்சைப்படுத்தப்படுகின்றன.
இதன் மூலம் இந்நாட்டு ஊடகங்கள் செயற்படும் முறைமை தொடர்பாக கண்காணித்தல், அது தொடர்பான காரணிகளை மீளாய்வு செய்தல் என்பன இடம்பெற்றுள்ளன. குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக இந்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்கள் தொடர்பாகவும் நாம் காரணிகளை மீளாய்வு செய்தே வருகின்றோம். அவை இலங்கைக்குப் பொருத்தமாக அமையக்கூடிய வகையில் காரணிகள் கண்டறியப்படுகின்றன. ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஆழமாகக் கையாளப்படவும் செய்கின்றன.
இக்காரணிகள் ஜனாதிபதிக்கும் பிரதமர் மற்றும் உரிய அமைச்சர்களுக்கும் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவைதான் எமது ஊடக நிலையத்தின் பணிகளாக உள்ளன.
இத்தகைய பணிகளில் ஈடுபடும் நிலையத்திற்கும் அங்கு பணிகளில் கணிசமான பங்களிப்பு செய்யும் செயற்பாட்டுச் சபைக்கும் பாரிய நிந்தனையையே விளைவித்திருக்கிறார்கள். இவ்வாறு அவமானத்திற்குள்ளாக்காது இருபக்க விளைவுகளை உரியவகையில் கண்டறிந்து தீர்மானத்திற்கு வருவதே நல்லது.
கட்சி அரசியலுக்கு மதிப்பளித்து இந்நாட்டில் காட்டுச்சட்டம் அரங்கேற இடமளிப்பது நல்லதல்ல. தவறாக வழி நடத்தப்படுவதும் உகந்ததல்ல. 1930 ஆம் ஆண்டுகளில் இருந்து ஜனநாயகத்தை அனுபவித்த நாடு இது. எமது நாடு யுத்தம், இளைஞர் கிளர்ச்சிகளுக்கு முகம் கொடுத்திருக்கிறது. இந்நிலையிலும் எமது நாட்டு மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்நின்று உழைத்திருக்கிறார்கள். அதனால் தயவு செய்து ஜனநாயகத்தைப் பேண இடமளித்து யாப்புக்கு உரிய கௌரவம் வழங்க முன் வர வேண்டும்.
ஜனநாயக நாடொன்றில் அரசியல்வாதிகள் விலை போவது தொடர்பாக தவறான வழிகாட்டல் வழங்கப்படுவதும் நல்லதல்ல. இது தொடர்பாக சகல அரசியல் கட்சிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று கூறினார்.
-Vidivelli (ஏ.எல்.எம். சத்தார்)
யாப்பை மதிக்காது மக்களை தவறாக வழிநடத்தி நாட்டை காட்டு மிராண்டி யுகத்தில் தள்ளவேண்டாம்.
Reviewed by Madawala News
on
November 07, 2018
Rating: