கல்முனை ஸாஹிறாவுக்கு அலியார் என்ற ஒரு அற்புதமான ஆசிரியர்.


கல்முனை ஸாஹிறாவுக்கு பல அதிபர்களும், ஆசிரியர்களும் வந்து கல்விப் பணியாற்றி மறைந்திருக்கின்றார்கள்.
ஆனால் கல்லூரியின் வரலாற்றில் "ஒழுக்கம்" (DISCIPLINE) என்றாலே ஞாபகத்திற்கு வரும் ஒரு ஆசிரியர் இருந்தார், அவர்தான் Poilce Aliyar என அழைக்கப்பட்ட மர்ஹூம் A.அலியார் Sir அவர் பற்றிய பதிவே இதுவாகும்.

அறிமுகம்..

அலியார் சேர் அவர்கள் காரைதீவு மாளிகைக்காட்டை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர். விவசாயம் மற்றும் தொழிநுட்ப கற்கை(Technical Subjects) என்பவற்றில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமல்ல; அக்கால Cadet Service ல் இணைந்து பணியாற்றியதன் மூலம் 2ஆம் LT தரத்தை உடையவர். அதனாலேயே பலரும் அவரை "பொலிஸ் அலியார் சேர்" என அழைத்தனர். அந்தக் கருத்துக்கேற்ப அவர் ஆர்வமிக்க துடிப்பான பொறுப்புணர்வுள்ள ஒரு ஆசிரியர் ஆவார்.

சிறப்புத்தன்மை.

அலியார் சேர் பாடசாலையின் மீது மிகவும் பற்றுக்கொண்ட ஒருவர் மட்டுமல்ல, தான் பொறுப்பெடுத்த கடமையை சிறப்பாகச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர். பாடசாலையின் மாணவர்கள் தொடர்பான  ஒழுக்கம் சார் விடயங்களைப் பூரணமாகப் பொறுப்பேற்று நடாத்திய ஒருவர். அவரது காலத்தில் தான் கல்முனை ஸாஹிறா பல்வேறு விடயங்களில் தனது இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் முன்னோக்கிச் சென்றது எனலாம். மட்டுமல்ல இப்பிரதேசத்தின் பாடசாலைகளில் இவரது செயற்பாடுகள் முன் உதாரணமாகவும் கொள்ளப்பட்டன.

புத்தாக்கம்...

அலியார் சேர் அவர்கள் ஸாஹிறா வில் உள்ள Board of Discipline என்பதை முறையாகக் கட்டமைத்தவர். அதன் பொறுப்பில் இருந்த "Prefect Section" என்ற பகுதியை மிகவும் திறமை உள்ள ஒரு பிரிவாக உருவாக்கி, பாடசாலையின் கட்டமைப்பில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தாருந்தார். அது மட்டுமல்லாது அவர் தானாகவே பல்வேறுபட்ட புதிய திட்டங்களை உருவாக்கவும், அதனைச் செயற்படுத்தவுமான ஆற்றலைக் கொண்டிருந்த ஒரு மிகத் திறமையான ஆசிரியர். அவரால் உருவாக்கப்பட்டு பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் முக்கியமான இரண்டு விடயங்கள் இன்றும் உள்ளன.

1) பாடசாலை மாணவர்கள் தொப்பி அணிவது.

2) அனைவரும் சப்பாத்து அணிவது.

இதில் சப்பாத்து விடயத்தில் அவர் மிக்க கவனமாகவும், கடுமையாகவும் இருப்பார். மாணவர்களுக்குத் தனது அறிவுரைகளின் மூலம் போதிக்கும் அவர், அவற்றை மாணவர்கள் செயற்படுத்த முடியாதவிடத்து பல வினோதமான தண்டனை முறைகளையும் பரிந்துரைப்பார். தன்னால் முன்னெடுக்கப்பட்ட "அனைவரும் சப்பாத்து அணிதல்" என்ற திட்டத்தை வெற்றி அடையச் செய்வதற்காக பல நூறு மாணவர்களுக்கு பழைய மாணவர்களின் உதவியுடன் இலவசமாக சப்பாத்துக்களை வழங்கி உதவியதுடன் தனது நோக்கத்தையும் வெற்றியடையச் செய்தார். இப்படி பல விடயங்களைச் சாவாலாகக் கொண்டு  இவர் நடைமுறைப் படுத்தி இருந்தார்.

அவரது கனவு...

அலியார் சேர் அவர்கள் ஸாஹிறாவை ஒரு கொழும்பில் உள்ள உயர் பாடசாலைகளின் தரத்திற்கு அதன் ஒழுக்க புறக்கிருத்தியக் கட்டமைப்பை முன்னேற்ற வேண்டும் எனக் கனவு கண்ட ஒருவர். அதற்காக Cadet பிரிவு, First Aid பிரிவு போன்ற பல பிரிவுகளை தம்மோடு ஒத்துழைத்த ஆசிரியர்களின் உதவியுடன் உருவாக்கி செயற்பட்டவர்.

கண்ணியமான கடமை...

அலியார்சேரின் சிறப்பு, அவர் சொல்வதை தன் வாழ்விலும் கடைப்பிடித்த ஒருவர் மட்டுமல்ல; பல நூறு மாணவர்கள் கற்கும் பாடசாலையில் அவர் பாடசாலைக்கு வரும் நேரத்தையும் அவர் வீடு  செல்லும் நேரத்தையும் யாரும் காண முடியாது. அந்தளவு நேரத்தோடு பாடசாலைக்கு வந்து, மிகவும் பிந்தியே வீடு செல்லக்கூடியவராக இருந்தார்.  அத்தோடு அவரது பெரும்பாலான நேரம் பாடசாலையிலேயே கழியும். குறித்த பாடசாலையில் மாணவனாகவும் ஆசிரியராகவும், கடமை புரிந்த வகையில் பல  விடயங்களை அலியார் சேரிடம் இருந்து எனது தனிப்பட்ட வாழ்வில் படித்திருக்கின்றேன்.

மறைவும், இழப்பும்

அலியார் சேர் அவர்கள் 2000 த்தின் ஆரம்பத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிர் நீத்தார். அவரது மாரடைப்புக்கான காரணங்களில் ஒன்று பாடசாலை பற்றிய கவலையும், அதன் பொறுப்புணர்வாகவும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தளவு அவர் பாடசாலை மீது அக்கறை உடையவராக இருந்தார். அதுமட்டுமல்ல தனது வாழ்வில் நீண்ட காலம் பாடசாலைக்காகவே சேவை செய்து விட்டு தனக்கான வாழ்விற்காக இல்லற வாழ்வில் இணைந்து, ஓரிரு வருடங்களில் அவர் மறைந்தது, மிகவும் கவலையான விடயமாகும்.

சேவையின் விளைவுகள்...

அலியார் சேர் அவர்களின்  ஆலோசனையும், அவர் முன்மொழிந்த நடைமுறைகளும் அன்று கடினமாக இருந்தாலும், இன்று பலரும் தமது வாழ்வின் முன்றேற்றத்திலும்,ஒழுக்கத்தன்மையிலும் அலியார்சேரின் பங்கு உண்டு என்பதைநினைத்துப் பார்க்கின்றனர். குறிப்பாக 80 களின் ஆரம்பத்திலும், 90களின் இறுதிப்பகுதியிலும் கற்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து ஏதோ ஒரு நன்மையைப் பெற்றவர்களாகவே இருப்பர். இன்னும் அவரது நேரம் தவறாமை என்ற கட்டளை பலரது University Life யில் நிறைய உதவி புரிந்து உள்ளது என்பதில் ஐயமில்லை. அந்தளவுக்கு அவர் மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டிருந்தார்.

இதுவரை ஈடு செய்யப்படாத இடைவெளி ..

கல்முனை Zahira வரலாற்றில் அதன் கல்வி வளர்ச்சியில் பல ஆசிரியர்களின் இழப்புக்கள் பிற்காலத்தில் வந்தவர்களால் ஈடு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அலியார் சேர் அவர்களின் "ஒழுக்கப் பொறுப்பிற்கான இடம்" இன்னும் எவராலும் ஈடு செய்யப்படவில்லை என்றே கூறமுடியும்.

ஸாஹிறா விற்குள் நுழைந்ததும் Board of Discipline ஐக் காணும் போதெல்லாம் எங்கள் கண்கள் இன்றும் அலியார் சேரையும் சேர்த்தே தேடுகின்றன. ஒரு முன்மாதிரியான ஆசிரியர் மரணித்துப் பல வருடங்கள் கடந்தாலும் அவருக்காக அவரால் நன்மை பெற்ற பல நூறு மாணவர்களின் பிரார்த்தனைகள் இன்றும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

அவரது மேன்மைக்காகப் பிரார்த்திக்க வேண்டுகின்றேன்.

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA
கல்முனை ஸாஹிறாவுக்கு அலியார் என்ற ஒரு அற்புதமான ஆசிரியர். கல்முனை ஸாஹிறாவுக்கு அலியார் என்ற ஒரு அற்புதமான ஆசிரியர். Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.