அதர்மத்துக்கு எதிராக போராடிய தமிழ் இளைஞன், பெரும்பான்மை இன குழுவால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்.
(எம்.எப்.எம்.பஸீர்)
கள்ளச் சாராயம் உற்பத்தி செய்யும் இடம் தொடர்பிலும் அதனால் ஏற்படும் இடையூறுகள்
குறித்தும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் இளைஞன் குழுவொன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொலுவாவில பகுதியில் பார்ம் தோட்டத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை 6.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த தனபால் விஜேரத்தினம் எனும் தமிழ் இளைஞனே கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
இரத்தினபுரி, கொலுவாவில பார்ம் தோட்டம் பகுதியில் உள்ள கள்ளச் சாராயம் உற்பத்தி செய்யும் இடம் காரணமாக பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளன.
இந் நிலையில் நேற்று குறித்த தமிழ் இளைஞன் அந்த கள்ளச்சாரயம் உற்பத்திக்கு எதிராகவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எதிராகவும் நேற்று இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
அவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ள இளைஞன் , அதன் பின்னர் வீடு திரும்பும் போதே பெரும்பான்மை இனத்தவர்களை உள்ளடக்கிய குழுவொன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளச் சாராயத்துக்கு எதிராக குறித்த இளைஞன் செய்த முறைப்பாடு மற்றும் முன் விரோதம் கொலைக்கான காரணமாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந் நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த இரத்தினபுரி பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட பலர் தலைமறைவாகியுள்ள நிலையில் நேற்று இரவு முதல் இரத்தினபுரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத்மசிறி முனசிங்கவின் உத்தரவின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.டி.ஏ. சேரசிங்கவின் ஆலோசனைக்கு அமைய விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவம் பதிவானதையடுத்து, உடனடியாக இரத்தினபுரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத்மசிறி முனசிங்கவை தொடர்புகொண்டுள்ள, தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பிலான அமைச்சர் மனோ கணேசன், சந்தேக நபர்களை உடன் கைது செய்து பிரதேசத்தின் அமைதியை உறுதி செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்போது உடன் சந்தேக நபர்களை கைது செய்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத்மசிறி அமைச்சர் மனோவிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுடனும் தொடர்பு கொண்டு அமைச்சர் மனோ கணேசன் நிலைமையை விளக்கியுள்ளார்.
அதர்மத்துக்கு எதிராக போராடிய தமிழ் இளைஞன், பெரும்பான்மை இன குழுவால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்.
Reviewed by Madawala News
on
September 20, 2018
Rating: