கண்டியில் ஏற்பட்ட வன்முறையினால் 20 மதஸ்தலங்களும், 297 வீடுகளும், 223 வர்த்தக நிலையங்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளன
கண்டி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 18 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது
என்றும், எஞ்சிய தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேலுகுமார் எம்.பியிடம் நேற்று உறுதியளித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பிரதமரிடமிருந்து நேரடி பதில்களை பெறுவதற்குரிய கேள்வி, பதில் நேரத்தின்போது ஐ.தே.கவின் கண்டிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எம்.பியால் எழுப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வுறுதிமொழியை வழங்கினார்.
“ முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த மேமாதம் கண்டி மாவட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இவ்வன்முறையால் எத்தனை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சம்பவத்தால் சேதத்துக்குள்ளான சமய ஸ்தலங்கள், வீடுகள், வியாபார நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு, சேதங்கள் தொடர்பில் மதிப்பிடப்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு, இழப்பீடாக வழங்க அரசு உத்தேசித்துள்ள தொகை எவ்வளவு, அதில் வழங்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு?”
என்றும் வேலுகுமார் எம்.பி. கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இவற்றுக்கு பதிலளித்த பிரதமர் கூறுகையில்,
“ கண்டியில் ஏற்பட்ட வன்முறையினால் 20 மதஸ்தலங்களும், 297 வீடுகளும், 223 வர்த்தக நிலையங்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இவற்றுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 205 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த மாதம் 31 திகதிவரை 18 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் எஞ்சிய தொகை கையளிக்கப்படும். அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
கண்டியில் ஏற்பட்ட வன்முறையினால் 20 மதஸ்தலங்களும், 297 வீடுகளும், 223 வர்த்தக நிலையங்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளன
Reviewed by Madawala News
on
August 09, 2018
Rating: