ஹெல உறுமயவுக்கு கெரக்டர் சர்டிபிகேட் கொடுக்கும் அப்துர் ரஹ்மான் அல் ஜிஹாத் அல் கைதா நூலை படித்து தெளிவு பெறவேண்டும் ..
NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு..!
நீங்கள் பேசிய வீடியோ ஒன்று பார்க்கக் கிடைத்தது. அதிலே ஜாதிக ஹெல உருமய என்ற இனவாத இயக்கமொன்றைப் உங்களது பார்வையில் மிகவும் பாராட்டி பேசியிருந்தீர்கள்.
அதிலே அவர்கள் இனவாதிகள் இல்லையென்றும், அப்படி இனவாதிகளாக இருந்திருந்தால் இனவாதத்துக்கு துணைபோன மஹிந்த அரசாங்கத்திலேயே தொடர்ந்தும் இருந்திருப்பார்கள் என்று உங்களுடைய கண்டுபிடிப்பை கூறியுள்ளீர்கள்.
மேலும் அவர்களுடைய இலக்குகள் எல்லாம் நாட்டை கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதும்,இந்த நாட்டை முன்னேறிய நாடாக பார்ப்பதுமேயாகுமென்றும், அதனால்தான் நல்லாட்சியை அமைப்பதற்கு அவர்கள் முன்னமே வந்தார்கள் என்றும் பேசியிருந்தீர்கள்.இந்த கருத்தானது மிகவும் வித்தியாசமானதும், ஆச்சரியமானதுமாக இருந்ததன் காரணமாகத்தான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்த ஹெல உருமைய என்ற இயக்கம் கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டார்கள் அவர்களுடைய நோக்கம் என்ன என்பதை முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்த உலகமே அறிந்திருந்த நிலையில் நீங்கள் மட்டும் அறியாமல் போனதுதான் ஆச்சரியமாக உள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் சவூதி அரசாங்கத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நுரைச்சோலை என்ற இடத்தில் கட்டப்பட்ட 500 வீடுகளை, அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கவிடாமல் நீதிமன்றம் சென்று, இந்த ஹெல உருமய என்ற இனவாத இயக்கம் தடை வாங்கியவிடயம் உங்களுக்கு இனவாதமாக தெரியவில்லை போலும்.
இந்த ஹெல உருமையின் மூலகர்த்தாவான சம்பிக்க ரணவக்க அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவது மட்டுமல்ல, தனது மனதில் உள்ள தீயை "அல்ஜிஹாத்" என்ற புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தியும் உள்ளார்.அது மட்டுமல்ல அதனை ஒவ்வொரு சிங்கள மகனும் அறிந்து அதன் மூலம் அப்பாவி முஸ்லிம்களை வெறுத்தொதுக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தையும் நிறைவேற்றியவராவார்.
அவருடைய புத்தகத்தை படிக்கும் சிங்கள மகன் எவனும் முஸ்லிம்களை விரோதியாக பார்க்காமல் விடமாட்டான். அந்தளவு அந்த புத்தகத்திலே முஸ்லிம்களைப் பற்றிய தவரான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அதனை உங்களைப் போன்றவர்கள் இன்றும் கண்டுகொள்ளவுமில்லை, அந்த புத்தகத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுமில்லை.அதற்கு உங்களுக்கு நேரமுமில்லை என்று கூறிக்கொண்டு.
அந்த புத்தகத்தில் உள்ள சில தீய கருத்துக்களை பதிவிடுகிறேன்.
அவர் எழுதிய அல்ஜிஹாத் என்ற புத்தகத்தின்,
263 வது பக்கத்தில் முஸ்லிம்கள் இலங்கையை அந்நியர்களுக்கு காட்டிக்கொடுத்தவர்கள் என்றும், சிங்கள மன்னர்களுக்கு எதிராக அந்நியவர்களுடன் சேர்ந்து போர்தொடுத்தவர்கள் என்றும், போர்த்துக்கேயர் ஆட்சிக்காலமான 1517ம் ஆண்டு நடந்த சண்டையில் மன்னன் தர்ம பராக்கிரம பாஹுவுக்கு எதிராக முஸ்லாம்கள்தான் எங்களிடம் கோள் மூட்டினார்கள் அதனால்தான் நாங்கள் மன்னனுக்கு எதிராக போர்தொடுத்தோம் என்று போர்த்துக்கேயர்கள் கூறினார்களாம்.
அதனால்தான் பிற்காலத்தில் முஸ்லிம்களை போர்த்துக்கேயர்கள் விரட்டியடித்தார்கள் என்று கூறியுள்ளதுடன், ஆரம்ப காலம் தொட்டே முஸ்லிம்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற தீய கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
அந்த புத்தகத்தின் 249ம் பக்கத்தில்.
அஷ்ரப் உருவாக்கிய ஒலுவில் பல்கலைக்கழகம் இஸ்லாமிய தீவிரவாதத்தை போதிக்கும் தீ பிழம்பாகும் என்று தலையங்கம் தீட்டிவிட்டு.அல்லாஹு அக்பர் என்று கோசமிட்டு 2003ம் ஆண்டு ஒலுவில் பிரகடனத்தை செய்தார்கள் என்றும், அதன் மூலம் முஸ்லிம்கள் இந்த நாட்டின் தனியானதொரு ஆட்சியை ஏற்படுத்த முனைகின்றார்கள் என்றும் வரலாற்றை புரட்டிப்போடுகிறார்.
280 பக்கத்தில்
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தெற்கில் சிங்களவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தனர் என்றும் கூறியுள்ளார்.
278 ம் பக்கத்தில்
அஷ்ரப் தமது அடிப்படைவாத அரசியல் பயணத்தில் தாமொரு பேரம் பேசும் சக்தியாக மாறுவதற்கு சவூதி அரசாங்கத்தின் உதவியோடு தாருஸ்ஸலாம் என்ற தலைமையகம் ஒன்றை நிறுவி 2012 ம் ஆண்டளவில் எமது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற முனைகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு 276, 277, 278, 279ம் பக்கங்களில்
இந்த நாட்டிற்குள் போதைவஸ்துக்களை கடத்துவதும், திருட்டு பொருட்களை வர்த்தகம் செய்வதும், கறுப்பு பணத்தை கையாள்வதும், பாதாள உலக கோஷ்டிகளை இயக்குவதும், முஸ்லிம் அடிப்படைவாதமே மேற்கொண்டு வருகின்றது. இந்த இஸ்லாமிய அடிப்படைவாதமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்ளை நிர்வகிக்கின்றார்கள் என்று கூறி மேலும் பல குற்றச்சாட்டுக்களையும் எழுதியுள்ளார். (இதனை முழுவதுமாக எழுதினால் கட்டுரை நீண்டுவிடும் என்ற காரணத்துக்காகவே சுருக்கமாக எழுதியுள்ளேன்.)
இதோடு நாம் ஜீரணிக்கவே முடியாததும் பொய்யானதுமான நிறைய கட்டுக்கதைகளையும், பொய்களையும் எந்தவித மனச்சாட்சியுமின்றி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டு அப்பாவி சிங்கள மக்களை வழிகெடுத்துவரும் இந்த சம்பிக்க ரணவக்க அவர்கள்தான் இந்த ஹெல உருமவின் மூலவேர் என்பதை அப்துல் ரஹுமான் அவர்கள் அறியாததுதான் மிகவும் ஆச்சரியமாகவுள்ளது.
ஞானசாரா அவர்களுக்கு பின்னாலிருந்து ஊக்கமளிக்கும் இந்த சம்பிக்க ரணவக்க அவர்கள் வழிநடத்தும் இயக்கம் இனவாதமான இயக்கம் அல்ல என்று உங்களால் எப்படித்தான் கூறமுடிந்ததோ தெரியவில்லை.
அளுத்கமை பிரச்சினை நடந்து மூன்று நாட்களின் பின் நிருபர்கள் மத்தியில் சம்பிக்க ரணவக்க அவர்கள் பேசிய வீடியோவை நீங்கள் பார்க்கவில்லைபோலும். (உங்களுக்கு தேவையென்றால் அதனை உங்களுக்கு அனுப்பிவைக்க முடியும்.) அதனைக் கேட்டதன் பின்பும் நீங்கள் இப்படியான கருத்துக்களை மாற்றிக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ஹபாயா பிரச்சினை துவக்கம் கலால் பிரச்சினைகள்வரை இவர்கள் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, அண்மையில் ரோகிங்கிய அகதி முஸ்லிம்களை என்ன பாடு படுத்தினார்கள் என்பதை நீங்கள் மறந்திருப்பீர்கள். (மஹிந்த ஆட்சியென்றால் அதனை மறந்திருக்க மாட்டீர்கள்).
மஹிந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு நமது இனவாத செயல்பாடுகளை செய்ய முடியாது என்றபோதுதான் நல்லாட்சி என்ற பெயரில் அவர்களுக்கு வாசியானஆட்சியை அமைத்துவிட்டு, வாழைப்பலத்தில் ஊசியை ஏற்றுவதுபோன்று அலட்டிக்கொள்ளாமல் சில காரியங்களை சாதித்துவருகின்றார்கள். அதற்கு உதாரணம்தான் மரிச்சிக்கட்டியை மறித்துக்கட்டியதும், மாயக்கல்லில் சிலை வைத்ததும், முஸ்லிம்களுடைய பாரம்பரிய செய்கைப் பூமிகளை காடுகள் என்று பறித்துக்கொண்டதுமாகும் என்பதை நீங்கள் அறிந்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளாதது உங்கள் தப்பில்லைதான். ( மஹிந்த அரசாங்கம் என்றால்தானே ஞாபகம் இருக்கும்). இந்த விடயங்களுக்கு மேலாக கிந்தோட்டை, அம்பாரை, திகன போன்ற இடங்களில் முஸ்லிம்களின் உயிர் உடமைகள் திட்டம் போட்டு அழித்த விடயம்கூட உங்களுக்கு இனவாதமாக தெரிந்திருக்க வாய்ப்பேயிருக்க முடியாது.(ஏனென்றால் செய்தது மஹிந்த அரசாங்கத்தில் இல்லையே...) இந்த விடயங்கள் அனைத்தும் மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் நீங்கள் துள்ளிக் குதித்திருப்பீர்கள். இந்த ஆட்சியில் நடந்ததால் அவ்வப்போது கண்டிப்பது மாதிரி கண்டித்துவிட்டு, அளுத்கமையைப் பற்றி மட்டும் வாய்க்கு வாய் பேசுகின்றீர்கள். இதன் நோக்கம் என்னவென்று விடயம் அறிந்தவர்கள் அறிவார்கள்.
இன்று நீங்கள் அரசியல் செய்வதற்கு காரணம் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதேயாகும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களோ தெரியாது, இல்லாதுவிட்டால் உங்களைப்போன்றவர்கள் வீதிக்கே இறங்கியிருக்கமுடியாது.
அந்தளவுக்கு புலிகளின் கை ஓங்கியிருக்கும். அந்த பாசிச புலிகளை அடக்கிய ஒரே காரணத்துக்காகவே தமிழ் மக்களும், வெளிநாட்டு ஏஜண்டுகளும் மஹிந்தவை எதிரியாக பார்க்கின்றார்கள் என்பதுகூட உங்களுக்கு புரியாமல் இருக்கலாம்.
மூதூர் முஸ்லம்கள் விரட்டியடிக்கப்பட்டபோது நமக்கு ஏன் வீன்வம்பு என்று அவர் ஒதிங்கியிருந்தால் தமிழர்கள் பிரமதாசா, சந்திரிக்கா போன்று இவரையும் பார்த்திருப்பார்கள். ஆனால் நாம் எங்கே இருந்திருப்போம் என்பதுதான் சந்தேகமே.
யாழ் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோது அன்றய ஜனாதிபதி பிரமதாசா அவர்கள் செய்ததுபோன்று தென்பகுதியிலே "கம்முதாவ" நடத்திக்கொண்டு வடக்கு கிழக்கிலே எது நடந்தாலும் பரவாயில்லை நாம் நமது வேலையைப் பார்ப்போம் என்று இவரும் இருந்திருந்தால், நாம் இன்று நிம்மதியாக வாழமுடியுமா? என்று என்னிப்பார்க்க நாம் தவறிவிடுகின்றோம்.
ஆகவே அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக தவறான கருத்துக்களையும், பலமான உண்மைகளையும் மறைத்து பேசாதீர்கள் என்று கூறுவதோடு, முடிந்தால் சம்பிக்க ரணவக்க அவர்கள் எழுதிய "அல்ஜிகாத்" என்ற நூலையும் படித்து படிப்பினை பெறுமாறு அன்பாய் கேட்டு விடைபெறுகின்றேன்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
ஹெல உறுமயவுக்கு கெரக்டர் சர்டிபிகேட் கொடுக்கும் அப்துர் ரஹ்மான் அல் ஜிஹாத் அல் கைதா நூலை படித்து தெளிவு பெறவேண்டும் ..
Reviewed by Madawala News
on
August 18, 2018
Rating: