பௌத்த மதத்தை பாதுகாத்து முன்கொண்டு செல்வோம்... ரோஸி சேனாநாயக்க புத்தர் சிலையை அகற்றவில்லை. புகைப்படத்தையும் எனக்கு பேஸ்புக்கில் அனுப்பி உள்ளார்.
(எம்.எம்.மின்ஹாஜ்)
கொழும்பு மாநகர சபையில் இருந்த புத்தர் சிலையை மேயர் ரோஸி சேனாநாயக்க நீக்கவில்லை.
ஒமல்பே சோபித தேரரின் கருத்து தொடர்பில் உடன் மேயருக்குக்கு தொலைபேசி மூலம் அழைத்து விசாரித்தேன். புத்தர் சிலையை நீக்கவில்லை என்றே கூறினார். பேஸ்புக் மூலம் புத்தர் சிலை இருப்பதாக உறுதிப்படுத்தி புகைப்படத்தையும் தனக்கு அனுப்பி வைத்தார்.
ஆகவே பெளத்த மதத்தை பலவீனப்படுத்தாமல் நவீன தொழில்நுட்ப யுகத்திலும் பெளத்த தர்மத்தை பாதுகாத்து முன்கொண்டு செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒமல்பே சோபித தேரருக்கு பதிலளித்தார்.
அத்துடன் பெளத்த அறநெறியை தனியார் வகுப்புகளின் மூலமோ பாடசாலை பாடவிதானங்களின் மூலமோ பூரணமாக கற்க முடியாது. ஆகவே தனியார் வகுப்பு தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வஜிரராம அறநெறி பாடசாலையின் நூற்றாண்டு விழா நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்படத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வஜிரராம தேரர் பெளத்த தர்மத்துடன் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், பாளி மொழி புத்தகங்கள் 2000 அளவில் வஜிரராம நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தார். வஜிரராம அறநெறி பாடசாலையை நாட்டின் வளமாக கருத முடியும். எனக்கும் குறித்த அறநெறி பாடசாலையுடன் தொடர்புள்ளது. என்னுடைய தாயார் பெலனி வஜிரராம தேரரிடமே பெளத்தத்தை கற்றுக்கொண்டார். ஹெலேனா விஜேவர்தன தனது பேரர்களை அழைத்து சென்று பெலனி வஜிரராம தேரரிடம் பெளத்த மதத்தை கற்றுக்கொடுக்க வழிவகுத்தார். நானும் இங்கு பெளத்த தர்மத்தை கற்றுள்ளேன்.
என்னுடைய சிங்கள மற்றும் ஆங்கில மொழி எழுத்து சீராக இல்லாத காரணத்தினால் மகாநாம தேரரிடம் சென்று சிங்கள எழுத்துகளை கற்றுக்கொண்டேன். ரோயல் கல்லூரி மிசனரி பாடசாலை இல்லை. எனினும் பெளத்த மதம் பாடவிதானமாக இருந்தது. என்றாலும் பெளத்த மதத்திற்கான பூரண அறிவினை நான் அறநெறி பாடசாலையின் ஊடாகவே கற்றேன்.
ஆகவே தற்போது பெளத்தம் உட்பட ஏனைய மத பாடவிதானங்கள் தற்போது பரீட்சையில் இணைக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டாலும் பெளத்த அறநெறியை முழுமையாக பாடசாலைகளில் கற்க முடியாது. அதுமாத்திரமின்றி தற்போது தனியார் வகுப்புகளில் பெளத்த மதம் கற்பிக்கப்படுகின்றது. பெளத்த மதத்தை அறிநெறி பாடசாலைகளின் ஊடாகவே முழுமையாக கற்க முடியும் என்பதே எனது கருத்தாகும். ஆகவே தனியார் வகுப்பு தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம்.
உலகம் கைத்தொழில் புரட்சி போன்றவற்றினால் மாற்றம் கண்ட போது வஜிரராம தேரர் போன்றோர் பெளத்த மதத்தை வளர்த்தனர். ஆகவே அதுபோலவே நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ற வகையில் நாமும் மாற்றம் காண வேண்டும்.
அத்துடன் கொழும்பு மாநகர சபையில் இருந்த புத்தர் சிலையை மேயர் ரோஸி சேனாநாயக்க நீக்கியதாக ஒமல்பே சோபித தேரர் இந்த மேடையில் குற்றம் சுமத்தினார். எனினும் இது தொடர்பாக உடன் ரோஸி சேனாநாயக்கவுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணமான தொலைபேசி மூலம் அழைத்து விசாரித்தேன். இதன்போது அவர் புத்தர் சிலையை நீக்கவில்லை என்றும் அந்த இடத்திலேயே அது உள்ளதாக கூறினார். பேஸ்புக் மூலம் புத்தர் சிலை இருப்பதாக உறுதிப்படுத்தி புகைப்படத்தையும் தனக்கு அனுப்பி வைத்தார். ஆகவே பெளத்த மதத்தை பலவீனப்படுத்த நாம் முனைய மாட்டோம். நவீன தொழில்நுட்ப யுகத்திலும் பெளத்த தர்மத்தை பாதுகாத்து முன்கொண்டு செல்வோம் என்றார்.
பௌத்த மதத்தை பாதுகாத்து முன்கொண்டு செல்வோம்... ரோஸி சேனாநாயக்க புத்தர் சிலையை அகற்றவில்லை. புகைப்படத்தையும் எனக்கு பேஸ்புக்கில் அனுப்பி உள்ளார்.
Reviewed by Madawala News
on
August 20, 2018
Rating: