(எஸ்.அஷ்ரப்கான்)
இறைவன் ஒருவனை பயந்த, தமது ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்
என்ற பக்தியுணர்வு கொண்ட பொலிசாரும், நீதிபதிமாரும், ஆட்சியாளரும் உருவாகாமல் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதை அமுல்படுத்துவது அரசியல் ரீதியிலும் இனவாத ரீதியிலும் துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்கும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பல குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது நீதியின் அடிப்படை.
நமது நாட்டை பொறுத்தவரை நீதி அரசியல்வாதிகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பது நாடறிந்த உண்மை. ஒருவர் குற்றம் இழைத்தவர் என்றால் அவர் சிறைக்கு அனுப்பப்படும் அதேவேளை இன்னொருவர் குற்ற்வாளி என தீர்ப்பு கூறப்பட்ட பின் சிறைக்கு அனுப்பப்பட்டு அவர் அரசுக்கு அறிமுகமானவராக இருந்தால் ஒரே வாரத்தில் பிணை வழங்கப்படும் நாட்டில் நாம் வாழ்கிறோம்.
அத்துடன் நீதிமன்றங்கள் பெரும்பாலும் பொலிசாரின் வாக்குமூலத்துக்கே மதிப்பளிப்பதால் பல நிரபராதிகள் உள்ளேயும் பல குற்றவாளிகள் உள்ளேயும் உள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான கிழக்கு முஸ்லிம்கள் சிலர் "புலிகள்" என்ற பொய் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதையும் கண்டுள்ளோம்.
புலிகளோடு தொடர்பு வைத்ததற்காய் பல வருடங்களாக சிறையில் பல தமிழ் இளைஞர்கள் வாடும் போது புலிகளின் போர்த்தளபதிகளாக இருந்தோர் பிரதேச சபை, மாகாண சபை, ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கும் நாட்டில் இருக்கிறோம்.
பெரும்பான்மையினர் இனவாதம் பேசினால் அவர்கள் பற்றி கணக்கெடுக்காமல் அவர்களை எதிர்த்து ஒரு முஸ்லிம் இனவாதம் பேசினால் அவனை சிறையில் தள்ளும் நாட்டில் வாழ்கிறோம்.
நீதிமன்றத்தின் அறிக்கையை ஒரு சாதாரண குடிமகன் கிழித்தால் அவனுக்கு தண்டனை அதையே ஒரு பெரும்பான்மை சமயத்தலைவர் செய்தால் அவருகெதிராக எந்த சட்ட நடவடிக்கையும் இல்லாத நாட்டில் வாழ்கிறோம்.
போதைப்பொருள் கடத்தல், பாவித்தலுக்கெதிராக கடுமையான தண்டனை வேண்டும் என்பதில் எம்மிடம் மாற்று கருத்து கிடையாது. ஆனால் தூக்குத்தண்டனை சட்டம் இந்த நாடு போன்ற நாடுகளில் நிறைவேற்றப்படுவதை அரசியல் துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்கும். ஆட்சியாளருக்கெதிரான ஒருவரின் வீட்டில் இரவோடிரவாக ஒரு கிலோ போதைப்பொருளை வைத்து விட்டு அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்படமாட்டார் என்பதற்கு யாராவது உத்தரவாதம் தருவாரா?
முஸ்லிம் தமிழ் பகுதிகளில் இரவோடிரவாக சிலைகளை புதைத்து விட்டு விடிந்ததும் தொல் பொருள் கிடைத்தது என வேலியிடும் அரச அதிகாரிகள் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியுமா?
ஆகவே நமது நாட்டின் அரசியல், பொலிஸ், நீதி நிர்வாகம் ஓரிறைவனை ஏற்று அவனது நீதிக்கு கட்டுப்படும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை நாம் வரவேற்கவில்லை என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் சட்டம் இப்போதைக்கு சாத்தியமா ???
Reviewed by Madawala News
on
July 13, 2018
Rating: