இலங்கை சிறைகளில் அரைக் காற்சட்டையுடன் வேறு மத குருமார்களுடன் சேர்த்து 15 தேரர்கள் உள்ளனர். ஞானசார தேரரும் அவ்வாறு இருப்பதில் தவறில்லை.
MFM.Fazeer
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட
அத்தே ஞானசார தேரர் அரைக் காற்சட்டையுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதில் சட்டரீதியாக எந்தத் தவறும் இல்லை எனவும் இவ்வாறு அரைக் காற்சட்டையுடன் சிறைகளில் 15 தேரர்களும் 3 வேறு மத குருமாரும் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.
ஞானசார தேரருக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், அவரது காவி உடை நீக்கப்பட்டு, ஏனைய கடூழிய சிறைத்தண்டனை கைதிகளைப் போன்று வெள்ளை அரைக் காற்சட்டையுடன் கூடிய ஆடை அணிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும், பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அது குறித்து வினவியபோதே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மேலும் தெரிவித்ததாவது,
' எமது சட்டத்தின் பிரகாரம் இரு வகையான தண்டனைகளை வழங்கலாம். கடூழிய சிறை, சாதாரண சிறைத் தண்டனையே அவை. இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டால் மேன் முறையீடு செய்யும் உரிமை உள்ளது. இந்த தண்டனை நீதிவான் நீதிமன்றினால் கொடுக்கப்பட்டிருப்பின், மேன் முறையீட்டு மனுவானது மேன் முறையீட்டு நீதிமன்றை விழித்து நீதிவான் நீதிமன்றிலேயே சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
அவ்வாறு மேன் முறையீடு செய்யப்படும்போது பிணை சட்டத்தின் அம்சங்கள் நீதிவானினால் ஆராயப்படல் வேண்டும். எனினும் அவ்வாறு ஆராய்ந்தபோது பிணை வழங்குவதற்கோ அல்லது பிணையை நிராகரிக்கவோ நீதிவானுக்கு அதிகாரம் உள்ளது. குற்றத்தின் பாரதூரம், குற்றவாளியின் கடந்தகால நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பிணை வழங்குவதையும், வழங்காமையையும் தீர்மானிக்க முடியுமென பிணை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்குத் தண்டனை அளிக்கப்பட்ட மறுகணம் அவர் சிறைச்சாலைகள் ஆணையாளரின் பொறுப்புக்குள் உள்வாங்கப்படுகின்றார். அதற்கு வேறு எந்த சட்டமும் செல்வாக்கு செலுத்த முடியாது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், அதுவரை மேன் முறையீடு தாக்கல் செய்திராவிட்டால் அவருக்கு அரைக் காற்சட்டை அணிவிக்கப்படும். அவருக்கு அது முதல் சிறைத் தண்டனை அமுல் செய்யப்படும். மேன் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பிலான கட்டளையொன்று சிறைச்சாலைக்கு அனுப்பப்படும் வரை அவர் அந்த அரைக் காற்சட்டையை அணிய வேண்டும். மேன் முறையீட்டு சிறைக் கைதியாக சிறைக்கு வருபவர் சாதாரண ஆடையை அணியலாம். மேன் முறையீட்டு சிறைக் கைதி ஒருவரை சாதாரண கைதியைப் போன்று வாரம் ஒரு முறை பார்வையிட வருவோரை பார்வையிடலாம். எனினும் அரைக் காற்சட்டை அணிந்தவர்களுக்கு மாதமொரு முறையே பார்வையிட அனுமதி வழங்கப்படும்.
உன்மையில் ஞானசார தேரர் மட்டுமன்றி இவ்வாறு அரைக்காற்சட்டை அணிவிக்கப்பட்ட 15 தேரர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். அத்துடன் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதகுருமார் ஒருவர் வீதம் இவ்வாறு அரைக் காற்சட்டை அணிவிக்கப்ப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஞானசார தேரரின் பிணை தொடர்பில் 22ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என அறிகின்றேன். அவ்வாறு பிணை உத்தரவு தொடர்பில் செல்லும்போது சாதாரணமாக செல்லலாம். இது எமது சட்டத்தில் உள்ள சாதாரண விடயம். எமது சட்டத்தின் பிரகாரம் சிறையில் தண்டனை அனுபவிக்கும் சிறைக்கைதிகளான பிக்குகள் பலர் உள்ளனர். முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க கொலை குற்றவாளி தல்துவே சோமராம தேரர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார். எனினும் அவர் அரைக் காற்சட்டையுடனேயே தடுத்து வைக்கப்பட்டார். அவர் மதம் மாறியதால் அவருக்கு உடை தொடர்பில் சிக்கல் எழவில்லை.
எனினும், புத்த ரக்கித்த தேரர் அரைக் காற்சட்டை அணிவிக்கப்பட்டார். அவர் தொடர்பிலும் சிக்கல் எழவில்லை. சிறைச்சாலையில் மத ரீதியிலான ஆடைகளை அணிய முடியாது. அனைத்து சிறைக்கைதிகளும் சமமாகவே கருதப்படுவர் எனத் தெரிவித்தார்.
-Vidivelli
இலங்கை சிறைகளில் அரைக் காற்சட்டையுடன் வேறு மத குருமார்களுடன் சேர்த்து 15 தேரர்கள் உள்ளனர். ஞானசார தேரரும் அவ்வாறு இருப்பதில் தவறில்லை.
Reviewed by Madawala News
on
June 20, 2018
Rating: