ஒரு சமூகத்தின் தலைவனுக்கு எதிர்காலத்தைப்பற்றி தீர்மானிக்கக்கூடிய அறிவு
ஓரளவாவது இருக்கவேண்டும். அப்படியில்லையென்றால் அந்தச் சமூகம் கைசேதப்படவேண்டிய நிலையே ஏற்படும்.
கடந்தகாலங்களில் பல விடயங்களில் தவறுகளை செய்துவிட்டு, பிறகு அது பிழையாக வரும்போது தவறு செய்துவிட்டோம் என்று கூறிய விடயங்களும் உண்டு. அந்த வகையில் மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்காக நல்லாட்சி அரசாங்கம் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் மகுடி ஊதியவர்கள்தான் இவர்கள்.
தங்களுடைய வாசிக்காக அரசாங்கள் பல திட்டங்களைப்போடுகிறது அதன் மூலம் சிறுபாண்மை மக்களுக்கு ஆபத்து வரப்போகின்றது என்று தெரிந்தும், வேண்டுமென்றே அதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, இப்போது இந்த தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்று கூறும் விடயத்தில் சாணக்கியம் இருக்கிறதா? அல்லது சங்கடம் இருக்கிறதா? என்பதை அந்த இறைவன்தான் அறிவான்.
மாகாணசபை திருத்தச்சட்டமூலம் வந்தபோது அதனை இறைவன் தடுத்துவிட்டான். பிறகு மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் வந்தபோது அதில் சிறுபாண்மையினருக்கு ஆபத்து இருக்கின்றது என்று எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் தலைவர்கள், கடைசிநேரத்தில் அதற்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்துக்கு தங்களது நன்றியைக் காட்டிக்கொண்ட விடயத்தை உலகமே அறியும். அதற்குள் சமூகத்தின் நோக்கமிருந்ததா? அல்லது தங்களுடைய கஜானவின் நோக்கமிருந்ததா? என்பதை இப்போது இவர்கள் நடந்து கொள்ளும் முறையைக்கொண்டே இறைவன் வெளிப்படுத்தி வருகின்றான்.
கடைசிநேரத்தில் ரிசாத் பதியுதீன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சண்டை பிடித்தபோது, பிரதமர் ரணிலிடம் சென்ற அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அமைச்சர் ரிசாட் பசீல் ராஜபக்சவின் அஜண்டாவில்தான் இயங்குகிறார் அதனைக் கவணித்துக்கொள்ளுங்கள் என்று ரணிலின் காதுக்குள் ஓதும்போது, எதர்ச்சையாக அந்த இடத்திற்கு சென்ற அமீரலி இதனைக் கவணித்து பகிரங்கப்படுத்திய விடயங்களையும் நாம் அறிவோம்.
அதன்பிறகு தன்மீது பழிவந்துவிடக்கூடாது என்ற பயத்தினாலும், அரசாங்கதரப்பு முக்கியஸ்தர்களின் கடும் எச்சரிக்கையினாலும் வேறு வழியின்றி அந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவித்த விடயங்களையும் நாம் அறிவோம்.
சுமேந்திரன் போன்றவர்களின் நோக்கம் இந்தச்சட்டமூலம் சிறுபாண்மையினருக்கு சிக்கலைக் கொண்டுவரும் என்று தெரிந்துகொண்டும் இதற்கு ஆதரவு தெரிவித்ததன் நோக்கத்தை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். இந்த சட்டமூலத்தில் லாபம் இருக்குதோ இல்லையோ ஆனால் தேர்தல் நடந்துவிடக்கூடாது, அப்படி தேர்தல் நடந்தால் மஹிந்தவின் கை ஓங்கிவிடும் அதனால் நாங்கள் கொண்டுவந்த நல்லாட்சிக்கு ஆபத்து வந்துவிடும். அதனால்தான் நாங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்றார்.
மனோ கணேசனும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தார்.
இந்த நிலையில் நமது முஸ்லிம் தலைவர்கள் என்ன நோக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தார்களோ தெரியாது. இப்போது இது வேண்டாம் என்று மூக்கால் அழுகின்றார்கள்.
இவர்களின் செயல்பாடுகளில் ஏதாவது ராஜதந்திரங்கள் இருக்கின்றதா? என்றுபார்த்தால் அங்கே அப்படி ஒன்றையும் காணமுடியவில்லை.
இப்படிப்பட்ட தலைவர்களை நம்பித்தான் நமது சமூகம் செல்லுகின்றது என்றால் இதன் விளைவுகள் பிற்காலத்தில் எப்படி அமையப்போகின்றது என்பதை நினைத்தால் பயமாக உள்ளது.
முன்னய தலைவர்களான் ரீ.பி.ஜாயா, தொடக்கம் அஷ்ரப்வரை முஸ்லிம்களுக்கு ஏதோ நண்மைகள் கிடைத்திருந்தது. இப்போதுள்ள தலைவர்கள் மூலம் என்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று யாராவது பட்டியலிடமுடியுமா? என்ற கேள்விக்கு விடை பூச்சியமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இருக்காது.
ஆகவே சமயோசிதமில்லாத தலைமைகளை நமது சமூகம் இன்னும் நம்புமாக இருந்தால், எதிர்கால சந்ததிகள் இப்போது வாழும் சமூகத்தை அடகு வைத்து விடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. இதனை உணர்ந்து நமது சமூக புத்திஜீவிகளும், மக்களும் முடிவு எடுக்கவேண்டும் என்பதே எங்களின் அவாவாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
ஆபத்து என தெரிந்தும் கை உயர்த்திவிட்டு கடும் எதிர்ப்பு வெளியிடுவதா “ சாணக்கியம் “
Reviewed by Madawala News
on
June 22, 2018
Rating: