பாராளுமன்றத்தின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சாதாரண பெரும்பான்மை யுடன் ஜனாதிபதியானவர்
தெரிவுசெய்யப்பட வேண்டும். ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் நபர் அவருடைய பதவிக்காலப் பகுதியில் எந்தவொரு அரசியல் கட்சியின் பதவியிலோ அல்லது அங்கத்தவராகவோ இருக்க முடியாது. சபாநாயகரை ஜனாதிபதியே தெரிவு செய்ய வேண்டும் என்றும் தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இந்த 20 ஆவது திருத்தம் ஏற்புடையதாக மாட்டாது. இந்த சட்டம் நிறைவேறுமாயின்
2020 ஜனவரி 9 ஆம் திகதியன்றே நடைமுறைக்கு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி நேற்று சபாநாயகரிடம் சமர்ப்பித்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணை நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்து சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. இதனை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க கையளித்ததுடன், இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துநெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ, நிஹால் கலபத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் கையளித்த 20 ஆவது திருத்த தனிநபர் பிரேரணையானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குவதற்கு வலியுறுத்துகின்றது. இதன்படி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சரின் பரிந்துரையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க்பபட்டு விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தனிநபர் பிரேரணையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள், தெரிவு செய்யும் முறைமை உட்பட பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அந்தவகையில் 20 திருத்த சட்ட தனி நபர் பிரேரணையின் சுருக்கம் பின்வருமாறு,
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலமாக இது இனம்காணப்படுகிறது. அரசியலமைப்பின் நான்காவது சரத்தைத் திருத்துவதற்கான பிரேரணையாகும். இந்த பிரேரணையின் ஊடாக வாக்கெடுப்பினால் ஜனாதிபதி தெரவுசெய்யப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் சரத்து நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியானவர் அரசாங்கத்தின் தலைவர் என்ற அரசியலமைப்பின் வசனத்தை 20 ஆவது பிரேரணை நீக்குவதுடன் இவர் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டியவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
அரசியலமைப்பில் ஜனாதிபதியானவர் மக்களால் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டியவராக இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியானவர் சாதாரணமாக ஐந்து வருடங்கள் பதவிவகிக்க வேண்டும் என இந்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விலிருந்து நான்கு வாரத்துக்குள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சாதாரண பெரும்பான்மையுடன் ஜனாதிபதியானவர் தெரிவுசெய்யப்பட வேண்டும்.
பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியானவர், அவருடைய முதலாவது பதவிக்காலம் முடிந்தால் தவிர, பாராளுமன்றத்தின் பதவி காலம் முடிவடையும்வரை தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்க வேண்டும் என இந்த பிரேரணையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழத்தல், பதவிவிலகல் அல்லது ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படும்போது 4 வாரங்களுக்கு மேற்படாத காலப் பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட வேண்டும். இவ்வாறு தெரிவுசெய்யப்படுபவர் முன்னைய ஜனாதிபதியின் எஞ்சியிருக்கும் காலப் பகுதி வரைக்கும் அப்பதவியை வகிக்க வேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஒரு வாரத்துக்குள் சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டும்.
ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் நபர் அவருடைய பதவிக்காலப் பகுதியில் எந்தவொரு அரசியல் கட்சியின் பதவியிலோ அல்லது கட்சியின் அங்கத்தவராகவோ இருக்க முடியாது என இந்த பிரேரணையில் கூறபபட்டுள்ளது.
இராஜதந்திரிகள், தூதுவர்கள் உத்தியோகபூர்வ பிரதிநிதி உள்ளிட்ட நியமனங்களை மேற்கொள்ளும்போது ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அவசியமாகும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர்கள், மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை அமைச்சரவை தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் 50 வீதத்துக்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்ற அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த, பிரதமர் வேட்பாளராக வேட்புமனுவி்ல் குறிப்பிடப்பட்டு வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்.மேலும் பொதுத் தேர்தல் நடைபெற்று அடுத்த பிரதமர் நியமிக்கும்வரை பிரதமர் அவருடைய பதவியில் இருப்பதற்கு தகுதியடையவராவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றம் ஒன்றின் ஊடாக குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதாயின் அமைச்சரவையின் அனுமதியுடன் பொதுமன்னிப்பு வழங்க முடியும். ஜனாதிபதி சபாநாயகரை நியமிப்பவராக இருப்பார். பிரதமர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டாலும் அமைச்சரவையில் பிறிதொரு அமைச்சரை பதில் பிரதமராக நியமிக்க முடியாது
அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கும் அது குறித்து தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கும் ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என இந்த பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் அந்த அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலே தவிர, தற்பொழுது ஜனாதிபதியாகப் பதவிவகிக்கும் நபர் 2020 ஜனவரி 8ஆம் திகதி வரை தனது பதவியில் இருப்பதற்கு உரித்துடையவராவார். அதேநேரம், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் தற்பொழுது பதவியிலிருக்கும் பிரதமர் தற்பொழுது நடைமுறையிலிருக்கும் சட்டத்துக்கு அமையவே பிரதமராக இருப்பார். 2020 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதியன்றே இந்த சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையில் சுட்டிகாட்ப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாகியவர் கட்சியில் பதவி வகிக்கவோ அங்கத்தவராக நீடிக்கவோ முடியாது.
Reviewed by Madawala News
on
May 26, 2018
Rating: